
விண்வெளியில் சாதிக்கும் இந்தியா :
ISRO Launch Earth Observation NISAR Satellite : விண்வெளி ஆய்வில் இந்தியா தொடர்ந்து சாதித்து வருகிறது. அந்த வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று விட்டு கடந்த வாரம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு அவரது பயணம் பேருதவியாக இருக்கும். அடுத்த கட்டமாக விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்ப உள்ள இந்தியா, வருங்காலத்தில், விண்வெளி மையம் ஒன்றை கட்டமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.
ராக்கெட் செலுத்துவதில் இந்தியா நிபுணத்துவம் :
ஏவுகணை நாயகர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் கலாம் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணண், ”சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 35 கிலோ ராக்கெட்டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் வல்லமையைப் பெற்றுள்ளது. இது சுமார் 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட் ஆகும்.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் :
புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன சிந்தடிக் அப்பர்சர் ரேடார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இது ஜிஎஸ்எல்வி எஃப்-16 வரிசையில் 18வது ராக்கெட் இது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்கம், புயல், பெருமழை உள்ளிட்ட பேரிடர்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பகிரும் திறன் கொண்டதாகும்.
நடப்பாண்டில் 12 ராக்கெட்டுகள் :
இஸ்ரோ நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் ஏவ உள்ளது. ரோபோவுடன் கூடிய ககன்யான் ஜி-1 ஆளில்லா செயற்கைக்கோளை டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். இந்திய விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ஆராய்ச்சிகளை இஸ்ரோ முடித்துள்ளது. அப்துல் கலாம் கூறியது போல இந்தியா தனது 100-வது சுதந்திர ஆண்டில் (2047ல்) வல்லரசாக மாறும்” இவ்வாறு நாராயணன் கூறினார்.
=====