

கர்நாடகா அனைத்து கட்சிக் கூட்டம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரை கர்நாடகா தர வேண்டும்.
தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு
தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியது. தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. கபினி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.
இயற்கையை எதிர்க்க முடியாது
அணையின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள்ளோம். எனவே கன்னட அமைப்பினர் இதை எதிர்த்து போராட வேண்டாம். ஆகஸ்டு 13ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் வேண்டாம். இயற்கையை எதிர்த்து சண்டை போட முடியாது. பிடிவாதமாக இருந்தால், நமக்குதான் பாதிப்பு.
பேச்சுவார்த்தை மூலமே தீர்வு
காவிரி நீர் பிரச்சினையை இரு மாநிலங்களும் பேசி தீர்க்க வேண்டும். கடவுள் ஆசியால், ஜூலை 31 முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளுக்கும் 68,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
மேகேதாட்டு - கர்நாடகா பிடிவாதம்
காவிரி நீர் பிரச்சினைக்கு மேகேதாட்டு அணையே இறுதி தீர்வு. அந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகாவை விட, தமிழகத்துக்கே அதிக நன்மை ஏற்படும். மேகேதாட்டு திட்ட அறிக்கையில் உள்ள சிறிய தவறுகளை சரி செய்து விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறோம்.
விஜய் துணிச்சல் மிக்கவர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், “தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார்.
அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியல் ரீதியாக எங்களுக்கிடையே வேறுபாடு இருந்தாலும், அவர் பெங்களூரு வருவதாக கூறியதை மனதார பாராட்டுகிறேன்.
சுமூகமான சூழலில் சந்திப்பே நல்லது
சுமுகமான சூழலில் முதல்வர் விஜய்யை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்பதாலே அந்த சந்திப்பை தள்ளிவைக்குமாறு கேட்டேன். எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கமிடுவதை நான் விரும்ப மாட்டேன்” இவ்வாறு சிவக்குமார் பதிலளித்தார்.
================