

தெலங்கானா அரசியல்
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிய முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவரது தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அங்கு முதலில் ஆட்சி அமைக்க, முதலமைச்சரானார் சந்திரசேகர் ராவ்.
அரசியலில் சந்திரசேகர் ராவ் குடும்பம்
அவரது மகன் கே.டி. ராமாராவ் அமைச்சராக, மகள் கவிதா எம்பியானார். மதுபான ஊழல் வழக்கில் சிறை சென்றவர் கவிதா. கடந்தமுறை நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் டிஆர்எஸ் கட்சி மண்ணை கவ்வ, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
டிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா நீக்கம்
தந்தை மற்றும் சகோதரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதே அவர் புதிய கட்சி தொடங்குவார், அரசியலில் நீடிப்பார் என்று கூறப்பட்டது.
புதிய கட்சி தொடங்கினார் கவிதா
அதனை மெய்ப்பிக்கும் விதமாக புதிய கட்சியை தொடங்கி, தெலங்கானா அரசியலில் கால்பதித்து இருக்கிறார். இவரது கட்சியும் டிஆர்எஸ் என்றே அழைக்கப்படுகிறது. அதாவது தந்தையின் கட்சிக்கு போட்டியாக தனது கட்சியை அறிமுகம் செய்து இருக்கிறார் கவிதா.
தெலுங்கானா மாநில சேனா
தனது கட்சிக்கு 'தெலுங்கானா மாநில சேனா' என்று பெயரிட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை கட்சியின் தொடக்க விழாவாக நடத்தி, தனது புதிய அரசியல் பயணத்தை அவர் முறைப்படி தொடங்கினார்.
"TRS" க்கு எதிராக "TRS"
கடந்த காலத்திலிருந்த 'தெலுங்கானா ராஷ்டிர சமிதி' என்ற பெயருடன் இது ஒத்துப்போவது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
திரண்டு வந்த பெண்கள்
புதிய கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து, மேட்சல் மாவட்டத்தின் உள்ள அத்வயா கன்வென்ஷன் பகுதி மக்கள் கடலாகக் காட்சியளித்தது. இந்த மாநாட்டிற்கு பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மகளிர் அதிகாரம் முழக்கம்
மகளிர் அதிகாரம் மற்றும் தெலுங்கானாவின் உரிமைகளை மீட்டெடுப்பதே தனது கட்சியின் முதன்மை நோக்கம் என்பதை அவர் தனது வருகையின் மூலமே சூசகமாகத் தெரிவித்தார்.
மேடையில் கட்சியின் பெயரை அறிவித்தவுடன், கவிதா தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
===================