

மேற்காசிய போர் - எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
LPG Gas Cylinder Booking Period Extended News in Tamil : ஈரான், இஸ்ரேல் அமெரிக்க போர் காரணமாக இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு புக்கிங் குறித்த கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங் 21 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 25 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு
மேற்காசிய நாடுகளின் போர் சூழல் காரணமாக ஏற்கெனவே, வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது, 923 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக உபயோக சிலிண்டர் விலை உயர்வு
அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 155 ரூபாய் உயர்த்தப்பட்டு சென்னையில், 2,044 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் அச்சம்
விலை உயர்வைத் தொடர்ந்து சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என அச்சம் கொண்ட மக்கள் முன்னதாகவே சிலிண்டர் புக்கிங் செய்ய தொடங்கிவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் தலைமையில் முக்கிய முடிவு
இதைத்தொடர்ந்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹர்தீப் சிங் புரி தலைமையில் டெல்லியில், உயர்நிலைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
21 நாளிலிருந்து 25 நாளாக நீட்டிப்பு
அதன் ஒருபகுதியாக எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை, கள்ளச்சந்தை முதலானவற்றை தடுக்கும் விதமாக, மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவிற்கான கால அளவு 21 நாளிலிருந்து 25 நாளாக அதிகரித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் படி, ஒரு சிலிண்டர் வாங்கிய பின், அடுத்த சிலிண்டரை 25 நாட்களுக்குப் பிறகு தான் முன்பதிவு செய்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.