7 நாளில் எல்பிஜி சிலிண்டர் மானியம் ரத்து? யார் யாருக்குத் தெரியுமா? முழு விவரம்!

lpg subsidy income limit 10 lakh: மானியக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
LPG Cylinder Subsidy Cancelled in 7 Days? Do You Know Who Is Affected? Full Details!
LPG Cylinder Subsidy Cancelled in 7 Days? Do You Know Who Is Affected? Full Details!source: google
1 min read

மத்திய அரசின் திட்டம்

நாடு முழுவதும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் வழங்கும் முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

குறிப்பாக, உயர்வருமானம் ஈட்டுபவர்களுக்கான மானியக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

யாருக்கு மானியம் கிடையாது?

தற்போதைய புதிய விதிமுறைகளின்படி, ஒரு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் கேஸ் சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள்

இதற்காக, வருமான வரி கணக்குத் தாக்கல் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, தகுதியுள்ள வாடிக்கையாளர்களை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

நிர்வாக நடவடிக்கைகள்

ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்தைக் கடக்கும் வாடிக்கையாளர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் தற்போது குறுஞ்செய்தி (SMS) அனுப்பி வருகின்றன.

மானியம் தானாகவே நிறுத்தப்படும்

அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானம் குறித்த விளக்கத்தை அளிக்கத் தவறினால் அல்லது 7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், மானியம் தானாகவே நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Give It Up திட்டம்

வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் 'Give It Up' திட்டத்தைப் போலன்றி, இது வருமான வரி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நேரடி நடவடிக்கையாக அமையும்.

மானியம் வழங்கும் முறை

முன்னதாக, சிலிண்டர் மானியம் நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், 'நேரடி மானியத் திட்டம்' மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிய பிறகு, மானியத் தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதார் இணைப்பு கட்டாயம்

எரிவாயு சிலிண்டர் இணைப்பை ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானியம் பெறுபவர்களின் விவரங்கள் துல்லியமாகப் பராமரிக்கப்படுகின்றன.

தற்போது வருமான வரி விவரங்களுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய அரசு முயன்று வருகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in