

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களையும், ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 80 இடங்களையும் கைப்பற்றின.
15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தாவின் கோட்டையை தன் வசப்படுத்தி இருக்கிறது பாஜக. காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜினாமா செய்ய மாட்டேன்
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ” நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை. நாங்கள் இந்தத் தேர்தலில் தோற்கவில்லை.
களவாடப்பட்ட வெற்றி
மாறாக எங்கள் வெற்றி களவாடப்பட்டது. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எனது கட்சியினர் ஒன்றுகூடி ஒருமித்த முடிவை எட்டுவோம்.
எங்களுக்கு தார்மீக வெற்றி
தேர்தலில் பெரியளவில் வன்முறை நடந்துள்ளது. காவல்துறை, தேர்தல் ஆணையம் என அமைப்பு ரீதியிலான தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தார்மிக வெற்றி பெற்றிருக்கிறது.
எங்களுடைய போட்டி பாஜகவுக்கு எதிரானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு எதிரானது. இந்தத் தேர்தலில் அவர்கள் நியாயமான வெற்றியைப் பெற்றிருப்பார்கள் என்றால் நான் புலம்பியிருக்க மாட்டேன்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி
வாக்காளர் பட்டியலிலேயே அவர்கள் குளறுபடிகளை ஆரம்பித்துவிட்டனர். 90 லட்சம் வாக்காளர்கள் பெயர்களை நீக்கியிருந்தனர். நாங்கள் நீதிமன்றம் சென்று 32 லட்சம் வாக்காளர்கள் பெயரை மீட்டெடுத்தோம்.
அதன் பின்னர் 7 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டன. அது எப்படி என்று இதுவரை யாருக்கும் தெரியாது.
நான் இதுவரை சந்திக்காத தேர்தல்
நான் என் வாழ்நாளில் இத்தகைய தேர்தலை சந்தித்ததில்லை. 2004-க்குப் பின்னர் இதுபோன்ற அராஜகங்களைப் பார்த்ததும் இல்லை. வாக்கு எண்ணிக்கையின் போது பரவலாக வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
முதல் சுற்று முடிவிலேயே பாஜக இத்தனை இடங்களைப் பெறக்கூடும் என்று கூறப்பட்டது. காவல் துறையும், மத்தியப் படைகளும் என்னை சுதந்திரமாக நடமாடவிடவில்லை.
என் மீது தாக்குதல்!
என்னை அடிவயிற்றிலும், பின்புறத்திலும் எட்டி உதைத்தனர். என்னை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து தூக்கி வீசினர். ஒரு பெண்ணான என்னிடம் அவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாங்கள் யாரிடம் புகார் செய்வோம். எல்லா அமைப்புகளும் பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்டு விட்டன.
தோல்வியில் இருந்து மீள்வோம்
தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டெழுவோம். நாங்கள் புலியைப் போல் போராடினோம். இனியும் போராடுவோம். எனக்கு நாற்காலி, அதிகாரம் பற்றி கவலையில்லை.
இந்தியா கூட்டணி ஆதரவு
எனக்கு மக்கள் மீதுதான் அக்கறை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் முடிவுக்குப் பின்னர் என்னுடன் பேசினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் என்னை அழைத்துப் பேசினர்.
பாஜகவுக்கு எச்சரிக்கை
பாஜகவுக்கு ஒரு விஷயத்தை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் மத்தியில் அதிகாரத்தில் இல்லாத போது இதே மாதிரியான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். உங்களது தேவையெல்லாம் நாடு முழுவதும் ஒற்றைக் கட்சி ஆட்சி.
பாஜக பிம்பம் உடைக்கப்படும்
எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள். இதுவே தொடர்ந்தால் உங்களது பிம்பம் உடைபடும். ஜனநாயகத்தின் மாண்பை மறந்துவிட்டீர்கள். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
=====