West Bengal : ”74 MLAக்களுக்கு சீட் இல்லை..” : மம்தா அதிரடி, பாஜகவை தோற்கடிக்க மெகா ப்ளான்!
மேற்கு வங்கம் - தேர்தல் களம்
West Bengal Assembly Election 2026 : 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கம், இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலம். இங்கு வரும் தேர்தல் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
மம்தா vs பாஜக
ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறது.
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையான போட்டியை கொடுக்க தயாராகி வருகிறது.
மம்தா vs சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் 144 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் சுவேந்து அதிகாரி மற்றும் திலீப் கோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூர் மற்றும் நந்திகிராமில் வேட்பாளராக சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார்.
291 தொகுதிகளில் திரிணாமூல் போட்டி
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசும், மூன்று தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சியான பிஜிபிஎம் போட்டியிடுகின்றன.
திரிணாமூல் காங்கிரஸ் பாலினம் மற்றும் சமூகப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது.
53 பெண் வேட்பாளர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் சார்பில் 95 வேட்பாளர்கள், சிறுபான்மை சமூகங்களிலிருந்து 48 வேட்பாளர்கள் என களம் காண்கிறார் மம்தா.
74 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை
ஆட்சிக்கு எதிரான மனநிலையைச் சமாளிக்க, எம்எல்ஏக்களாக இருக்கும் 74 பேருக்கு, இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதியவர்களுக்கு வாய்ப்பு
நடிகர் சோஹம் சக்ரவர்த்தி, ஐபிஎஸ் அதிகாரி பிரசுன் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மதன் மித்ரா, நடிகை சயந்திகா பானர்ஜி, பாடகி அதிதி முன்ஷி, ஜர்னா சர்தார் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுவேந்துவுடன் மோதும் மம்தா
இதன்மூலம், பாஜகவுக்கு எதிராக மம்தா மிகப்பெரிய திட்டத்துடன் களமிறங்கி இருக்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மோதவுள்ளார்.
இது 2026 சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அவர் 2011 முதல் இத்தொகுதியில் மூன்றுமுறை வெற்றி பெற்றுள்ளார்.
மம்தாவின் உதவியாளராக ஒரு காலத்தில் இருந்த சுவேந்து அதிகாரி 2021ல் நந்திகிராமத்தில் மம்தாவை தோற்கடித்தார்.
இது, மாநில சட்டமன்றத்திற்கு மீண்டும் திரும்புவதற்காக மம்தாவை பவானிபூரில் போட்டியிடத் தூண்டியது.
அவர் அந்த இடைத்தேர்தலில் 58,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆட்சியை பிடிக்க மம்தா தீவிரம்
நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்க வரிந்து கட்டி களமிறங்கி இருக்கிறார் மம்தா.
இந்தமுறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற உறுதியோடு கச்சை கட்டி நிற்கிறது பாஜக.
இந்தப் போட்டியில் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் ஓரமாக நிற்கின்றன.
=======

