

அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம்
ஆந்திரப் மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு மாபெரும் டிஜிட்டல் புரட்சி தொடங்கியுள்ளது.
'மன மித்ரா' திட்டம்
ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'மன மித்ரா' (Mana Mitra) எனப்படும் வாட்ஸ்அப் வழி ஆளுகைத் (WhatsApp Governance) திட்டத்தின் கீழ் தற்போது 1,126 அரசு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.
1,126 அரசு சேவைகள்
இதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தபடியே, வாட்ஸ்அப் மூலமாக 35 துறைகளின் சேவைகளை மிக எளிதாகப் பெற முடியும்.
இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது? இதனால் யாருக்கு என்ன லாபம்? எனப் பார்க்கலாம்....
மன மித்ரா திட்டம் (Mana Mitra Project)
’மன மித்ரா' வாட்ஸ்அப் ஆளுகை திட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசால் கொண்டு வரப்பட்டது. தொடக்க நிலையில் 161 சேவைகளுடன் மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட்டது.
35 துறைகள், 1,126 அரசு சேவைகள்
மக்களின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, பொது சுகாதாரம், வேளாண்மை, காவல்துறை, வருவாய் உள்ளிட்ட 35 துறைகளைச் சேர்ந்த 1,126 சேவைகள் இதில் வழங்கப்படுகின்றன.
எப்படிப் பயன்படுத்துவது?
பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியில் 95523 00009 என்ற ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிற்கு குறுஞ்செய்தி (Message) அனுப்புவதன் மூலம் இந்தச் சேவைகளை அணுகலாம்.
இடைத்தரகர் இன்றி சேவைகள்
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஆவணங்களைப் பெறுதல் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை எந்தவொரு இடைத்தரகரும் இன்றி, நேரடியாக இதன் மூலம் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் சான்றிதழ்களில் கியூஆர் (QR) குறியீடு பொருத்தப்பட்டுள்ளதால், இவற்றின் நம்பகத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்படுகிறது.
58 லட்சம் பேர் பயன்
அரசு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த வாட்ஸ்அப் திட்டத்தின் மூலம் இதுவரை 58.2 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்; 3.42 கோடிக்கும் அதிகமான முறை சேவைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் குறைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக AI4PGRS என்ற செயற்கை நுண்ணறிவு (AI) வசதியுடன் கூடிய அமைப்பும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாகவோ, புகைப்படம் வழியாகவோ அல்லது குரல் மூலமாகவோ (Voice Note) தங்களின் குறைகளைப் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சுமார் 17.6 லட்சத்திற்கும் அதிகமான குறைகள் இத்தளத்தில் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
'மன மித்ரா' வாட்ஸ்அப் தளத்தின் மூலம் 35 அரசுத் துறைகளைச் சேர்ந்த 1,126 சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன
இதுவரை சுமார் 58.2 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து, 3.42 கோடி முறை சேவைகளை பெற்றுள்ளனர்.
வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மின் கட்டணம் செலுத்துதல் போன்ற அன்றாடத் தேவைகள் உடனுக்குடன் கிடைக்கின்றன.
AI பயன்பாடு: மக்களின் குறைகளைத் தீர்க்கவும் (AI4PGRS), அரசுத் திட்டங்களை ஒருங்கிணைக்க State Data Lake மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
2026-2027 நிதியாண்டில் இந்தத் திட்டத்தை மேலும் மேம்படுத்த ரியல் டைம் கவர்னன்ஸ் சொசைட்டிக்கு (RTGS) ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு நீண்ட தூரம் பயணம் செய்து, மணிக்கணக்கில் காத்திருக்கும் பாரம்பரிய முறையை இந்தத் திட்டம் முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, சாமானிய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் ஆந்திர அரசு ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.
ஆந்திராவின் இந்த முன்னெடுப்பு, எதிர்காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்
=================