மேகதாது திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு உத்தரவு
Karnataka Govt Forms 30 Member Committee for Mekedatu Dam Project : தமிழகம், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொண்டு வரும் நிலையில், ஆயத்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் கருத்தை கேட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு
அணை கட்டினால், தங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு, சட்டப் போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் தன் முடிவில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் கருத்தை கேட்க உத்தரவிட்டு இருந்தது.
கர்நாடக அரசு அதை்துள்ள 30 பேர் கொண்ட குழு
இந்நிலையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை செய்வதற்காக, 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த குழுவில், அரசின் வெவ்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செய்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவுகளால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கும் நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள் பலவித முன்னேற்பாடுகளையும்,போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மேகதாது அணை குறித்து விவகாரத்தில் தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.