

காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சி
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.
எனினும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுப் புதிய ஆட்சியை தவெக அமைத்தது.
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்
முதல்வராக விஜய் பொறுப்பேற்க, காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ்குமார் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினரான விஸ்வநாதன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
அடுத்த பிரதமர் விஜய்!
சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகின்றன. தவெக அமைச்சர்கள் சிலர் "அடுத்த பிரதமர் விஜய் தான்" எனத் தொடர்ந்து பேசி வருகின்றனர். சட்டமன்றத்திற்கு வெளியேயும் இந்த விவகாரம் எதிரொலித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இதே கருத்தை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை கிளப்பி வருகிறார்கள்.
ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் - காங்கிரஸ்
2029 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் எனகாங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் இந்த திடீர் பேச்சு காங்கிரஸ் கட்சியினர் இடையே சங்கடத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2029ல் கூட்டணி எப்படி இருக்கும்?
2029 லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், எந்தக் கட்சிகள் எல்லாம் கூட்டணியில் இருக்கும், திமுகவின் நிலைப்பாடு என்ன என்பன போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
கருத்துக் கணிப்பில் விஜய் 3ம் இடம்
இந்தச் சூழலில், இந்தியா டுடே – சி வோட்டர்ஸ் நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 48.7%, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 27.1% மற்றும் முதலமைச்சர் விஜய் 9.2% வாக்குகளைப் பெற்று உள்ளனர்.
அமைச்சர் அதிரடி பதில்
தவெக அமைச்சர்களும், தவெகவினரும் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் எனும் ரீதியில் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், “முதலமைச்சர் விஜய், பிரதமர் எனப் பேசப்படுகிறதே?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
“உண்மை அதுதானே. பொறுத்திருந்து பாருங்கள்; கண்டிப்பாக நடக்கும்” எனப் பதில் அளித்தார்.
தவெகவிற்கு காங்கிரஸ் எச்சரிக்கை
இந்நிலையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், “2029ஆம் ஆண்டில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்.
ராகுல் காந்தியை தவெக பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால், தவெக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்வோம்” எனத் தெரிவித்தார்.
முடிவு முதல்வர் விஜய் கையில்!
எனவே பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் முதல்வர் விஜய் என்ன செய்ய போகிறார்? தனது கட்சியினரின் பேச்சுக்கு கடிவாளம் போடுவாரா? அல்லது காங்கிரசை எதிர்க்க துணிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
====================================