"தனிமனித சாதனையல்ல, சமூகத்தின் வெற்றி“ : மரியா கொரினா பெருமிதம்
வெனிசுலாவின் இரும்புப் பெண்மணி
Nobel Peace Prize 2025 Winner Maria Corina Machado : 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ”வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு மீட்க குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்தது.
தனிமனித வெற்றி அல்ல, சமூகத்தின் வெற்றி
நோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி கருத்து தெரிவித்த மரியா கொரினா, “ ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை. நான் நிச்சயமாக இதற்கு தகுதியானவர் அல்ல"' என தன்னடகத்துடன் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்த விளக்கம், அவரது புகழை மேலும் பரவச் செய்து இருக்கிறது.
வெனிசுலா மக்களுக்கு கௌரவம்
"வெனிசுலா மக்கள் சார்பாக நான் கவுரவப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். பணிவும் நன்றியுணர்வும் கொண்டவராக இருக்கிறேன். நாங்கள் எங்கள் இலக்கை இன்னும் அடையவில்லை. அதை அடைய நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்" என உறுதியாக நம்புகிறேன் என மரியா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா ! உண்மையில் யார் இவர்?
சமூக போராளி மரியா கொரினா
மரியா கொரினா மச்சாடோ, 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் நன்மதிப்பை பெற்றுத் தந்தது. வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார், அவரது தன்னலமற்ற உழைப்பு, அமைதிக்கான நோபல் விருதினை பெற்றுத் தந்து இருக்கிறது.
========