'ஒரே நாடு, ஒரே தேர்தல்' : NDA ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் 2029ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..!

2029 மக்களவைத் தேர்தலோடு சேர்த்து NDA ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்.
One Nation, One Election
One Nation, One Electionsource:ai
1 min read

2029-இல் முதல் கட்டத்தை தொடங்க திட்டம்

அரசமைப்பு சட்டத் திருத்த நடைமுறை சிக்கல்கள் காரணமாக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை 2034-ஆம் ஆண்டில்தான் முழுமையாகச் செயல்படுத்த முடியும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது.

ஆனால், 2034 வரை காத்திருக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியில் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2029 மக்களவைத் தேர்தலோடு சேர்த்து முதற் கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசின் முக்கிய வியூகம்

NDA ஆட்சி செய்யும் மாநிலங்களில், 5 ஆண்டு ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பாகவே சட்டப்பேரவைகளைக் கலைத்துவிட்டு 2029 மக்களவைத் தேர்தலுடன் இணைந்து தேர்தலை நடத்தும் வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.

அரசமைப்பு சட்டப் பிரிவு 174 (2) (பி)

மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் ஆளுநரால் சட்டப்பேரவையைக் கலைக்க முடியும் என்பதால், NDA ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதை செயல்படுத்துவது சாத்தியமே என்று கருதப்படுகிறது.

11 மாநிலங்களின் தேர்தல் சூழல்

NDA ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில், 17-இல் பாஜக நேரடியாகவும், 5-இல் கூட்டணிக் கட்சிகளுடனும் ஆட்சி செய்கிறது. இதில் 11 மாநிலங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தேர்தல் வரவுள்ளது.

அங்கு மீண்டும் NDA அமைந்தால், 2029-இல் அவைகளைக் கலைத்துவிட்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் திட்டம் வகுக்கப்படுகிறது.

பி.பி. சௌதரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான அரசமைப்பின் 129-ஆவது திருத்த மசோதாவை பாஜக எம்.பி. பி.பி.சௌதரி தலைமையிலான குழு 2023 டிசம்பர் 19 முதல் ஆய்வு செய்து வருகிறது.

இக்குழு வரும் குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்திற்குள் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் இக்குழு ஆலோசனைகளை முடித்துள்ள நிலையில், அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் கருத்து கேட்க உள்ளது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் ஆதரவு திரட்டும் முயற்சி

ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற JPC கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சகாரிகா கோஷ் ஆகியோர் இத்திட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்தனர்.

அரசமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுவதால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி ஆதரவு பெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

வரலாற்றுப் பின்னணி

இந்தியாவில் 1951 முதல் 1967 வரை மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்திலேயே தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இருப்பினும், சில மாநில சட்டப்பேரவைகள் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டதால், 1968-1969 காலகட்டத்தில் இந்த சுழற்சி அதாவது ஒரே தேர்தல் முறை முறை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in