

நாடாளுமன்ற மழைக்கால கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நீட் முறைகேடு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சிஜேபி போராட்டம் - ஸ்தம்பித்த டெல்லி
அவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பதால், டெல்லி ஸ்தம்பித்துள்ளது. ஆயிரக் கணக்கான இளைஞர்கள், டெல்லியை நோக்கி தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால், அடுத்தகட்ட போராட்டம் மிகத் தீவிரமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் அமளி
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து, எதிர்க்கட்சிகள் தொடர் அமளில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.
3வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில், எம்பிக்களின் அமளி காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டன.
ஒரு மணிக்கு ரூ.1.5 கோடி செலவு
இந்தநிலையில், நாடாளுமன்றத்தை நடத்த ஒருநாளைக்கு ஆகிற செலவு என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இரு அவைகளும் நடைபெற வேண்டும் என்றால், மணிக்கு 1.5 கோடி ரூபாய் செலவாகிறது.
ஒருநாள் செலவு ரூ.9 கோடி
ஒருநாளைக்கு நாடாளுமன்றம் 6 மணி நேரம் நடைபெறுகிறது என்றால், 9 கோடி ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது.
எம்பிக்களால் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க முடியாமல் போவதோடு, ஒரு நிமிடத்திற்கு ரூ2.5 லட்சம் வீணடிக்கப்படுகிறது.
அவை ஒத்திவைக்கப்படும் ஒவ்வொரு முறையும், இரு அவைகளின் பணிகள் முடங்கினாலும், மக்கள் பணம் தொடர்ந்து செலவிடப்படுகிறது.
நாடாளுமன்ற செலவுகள்
கட்டிடப் பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள், பணியாளர் செலவுகள், போக்குவரத்து, உணவு மற்றும் பிற நேரடி மற்றும் மறைமுகச் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
செலவுகள் எப்போதும் நிற்காது
நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் போதெல்லாம், அதற்கான நிதிச் சுமை நிற்காது. இரு அவைகளும் சட்ட மசோதாக்கள் குறித்து விவாதித்தாலும் சரி அல்லது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான செலவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
ஒரு முழு கூட்டத்தொடர் எந்தவித ஆக்கப்பூர்வ விவாதமும் இன்றி தொடர்ந்து முடங்கினால், பல கோடி ரூபாய் வீணாவாவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன,
கூட்டத் தொடருக்கு ரூ.200 கோடி வரை செலவு
அதன்படி பார்த்தால், அவை கூடும் நாட்களின் எண்ணிக்கை பொருத்து, ஒரு கூட்டத்தொடருக்கு 140 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை செலவாகிறது.
இது நிமிடத்திற்கு ₹2.5 லட்சம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
=====