
உச்சநீதி மன்ற சர்ச்சை சம்பவம் :
PM Modi Condemns CJI BR Gavai Attack : உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி கூட்டி சென்றனர், சனாதான தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என கூச்சலிட்டு அவர் சென்றுள்ளார். ஆனால், அதே நேரத்தில் கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது என நீதிபதி கவாய் எந்தவித பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடி கண்டனம்
நீதிமன்ற சர்ச்சை சம்பவத்திற்கு, பிரதமர் மோடி நீதிபதி கவாய்க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தனது கண்டனங்களையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஒவ்வொரு இந்தியரையும் கோபமடைய செய்துள்ளது. கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். கவாய் அமைதி காத்தது நீதியின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு என்று பதிவிட்டுள்ளார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி கண்டனம்
இந்த தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது என்றும் இது அவர் மீது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். தலைமை நீதிபதி கவாய் மிகவும் கருணையுள்ளவர். முழு தேசமும் அவருடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்"என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்த தாக்குதல் முயற்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்(CM MK Stalin on CJI Gavai Attack) சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தலைமை நீதிபதி வெளிப்படுத்திய கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மை நீதித்துறை அமைப்பின் வலிமையை காட்டுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது என்று கூறினார்.
மேலும் படிக்க : Karur Case : தவெகவின் நிலைமை இதுதானா? வருத்தம் தெரிவித்த நீதிபதி!
மேலும் இந்த தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தி இருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது நிறுவனங்களை மதித்து பாதுகாக்கும் மற்றும் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.