

கோப்பையை வென்ற இந்திய அணி
PM Narendra Modi Meet India Women Cricket Team : ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதையடுத்து, முதல் முறையாக ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025-ஐ வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிரதமரை சந்திக்கும் மகளிர் கிரிக்கெட் அணி
உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளனர். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, மும்பையில் உள்ள மகளிர் கிரிக்கெட் அணியினர், இன்றுமாலை டெல்லி செல்கிறார்கள். நாளை (நவம்பர் 5) அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்கள்.
50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா வென்ற முதல் கோப்பை இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் வெற்றியை தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, "ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி(India Wins ICC Women's World Cup 2025) பிரமிக்க வைக்கிறது. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு சிறப்பான திறமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது.
வீராங்கனைகளின் உறுதி வெற்றியை ஈட்டியது
அணி வீராங்கனைகள் போட்டி முழுவதும் ஒற்றுமையாகவும் விடாமுயற்சியுடனும் விளையாடினர். நம் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வரும் தலைமுறையினர் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளிக்கும்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
===============