

Prime Minister Modi's Address in the Lok Sabha
மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று விரிவான விளக்கமளித்தார்.
பிரதமர் மோடி வருத்தம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் மூன்று வாரங்களைக் கடந்து நீடிப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில் எழுந்துள்ள சவால்கள்
உற்பத்தி பாதிப்பு: போர் முனையில் உள்ள நாடுகள் பரஸ்பரம் எரிபொருள் நிலையங்களைத் தாக்குவதால், உலகளாவிய எண்ணெய் உற்பத்தி கடுமையாகச் சரிந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடலால் விநியோகச் சிக்கல்
ஈரானால் மூடப்பட்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' கடல்வழிப் பாதையினால், இந்தியாவிற்கு வர வேண்டிய எரிபொருள் கப்பல்கள் தடைபட்டுள்ளன.
இதன் காரணமாகவே உள்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
தாயகம் திரும்பிய 3.75 லட்சம் இந்தியர்கள்
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார்.
"போர் தொடங்கிய நாள் முதல் நமது தூதரகங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.
உலக தலைவர்களுடன் பேச்சு
இதுவரை 3.75 லட்சம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்குள்ள தலைவர்களுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்," என்று தெரிவித்தார்.
பிரதமரின் ஆழந்த இரங்கல்
மேலும், இந்த மோதலில் ஒருசில இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
பொருளாதாரப் பாதுகாப்பு அரண்
உலகெங்கும் விலைவாசி உயர்ந்து வரும் வேளையிலும், இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார்.
கச்சா எண்ணெய் சேமிப்பு
முதலில் அவசர காலத் தேவைகளுக்காக 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்குப் பாதுகாப்பு
சர்வதேச சந்தையில் ஒரு மூட்டை யூரியா ₹3,000-க்கு விற்கப்பட்டாலும், நமது விவசாயிகளின் சுமையைக் குறைக்க அதனை வெறும் ₹300-க்கே மத்திய அரசு வழங்கி வருகிறது என்றார்.
விரைவான தீர்வை நோக்கி
தற்போதுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்கத் தனி அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு, நிலைமை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.