
வாரணாசியில் பிரதமர் மோடி :
PM Modi About Operation Sindoor Success : தனது தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, ரூ.2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமரின் கிசான் திட்டத்தின் 20வது தவணையை விவசாயிகளுக்கு விடுவித்தார்.
புனித தலம் காசி :
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “ காசியில் இருந்து எதாவது ஒன்று சொல்லும் போது அது தானாகவே பிரசாதமாக மாறும். புனித பூமியில் இருந்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை விட வேறு என்ன அதிர்ஷ்டம் இருக்க முடியும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு காசிக்கு நான் வந்திருக்கிறேன்.
சபதத்தை நிறைவேற்றினோம் :
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி 26 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். என் மனது துக்கத்தால் நிறைந்தது. பயங்கரவாதிகளை பழிவாங்க நான் சபதம் செய்து இருந்தேன். தற்போது அந்த சபதம் நிறைவேறி உள்ளது. 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையால் தான் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி சாத்தியமானது.
ஆபரேஷன் சிந்தூர் - நாட்டிற்கு அர்ப்பணிப்பு :
ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க : ”ஆபரேஷன் சிந்தூர்” 100 சதவீதம் வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சிகள் :
சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வதந்திகளைப் பரப்பி, மக்களை எல்லா வழிகளிலும் தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றனர். நம்பிக்கையற்ற எதிர்க்கட்சி இந்த பொய்யான நம்பிக்கைகளுடன் வாழ்வது நாட்டிற்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் செய்வது, விவசாயிகளிடம் பொய் சொல்லி அவர்களை தவறாக வழிநடத்துவது தான்” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
=====