

டெல்லியில் விளாடிமிர் புதின்
Putin receives ceremonial welcome, Tri-Services Guard of Honour at Rashtrapati Bhavan : இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்றிரவு இந்தியா வந்தார். டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இதன்மூலம் இருநாட்டு நல்லுறவு எவ்வளவு ஆழமானது என்பது உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டது.
பகவத்கீதை புத்தகம் பரிசு
இதைத்தொடர்ந்து, அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில், பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார். அப்போது புதினுக்கு ரஷ்யாவில் எழுதப்பட்ட பகவத்கீதை புத்தகத்தை மோடி பரிசாக வழங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
இந்தநிலையில், இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புதினுக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். மத்திய அமைச்சர்களை ஜனாதிபதி முர்மு அறிமுகம் செய்து வைத்தார். தன்னுடன் வந்திருக்கும் ரஷ்ய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை புதின் அறிமுகம் செய்து வைத்தார்.
காந்தி சமாதியில் புதின்
அதன்பின், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற விளாடிமிர் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் புதினும், பிரதமர் மோடியும் பங்கேற்று உள்ளனர்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாநாடு முடிந்த பிறகு, புதினுக்கு பிரதமர் மோடி ஹைதராபாத் இல்லத்திலேயே மதிய விருந்து அளிக்கிறார். அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். அதன்பின், இன்று இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மாஸ்கோ செல்கிறார்.
இந்தியா - ரஷ்யா நட்புறவு
புதினின் இந்திய பயணத்தை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. அமெரிக்காவின் எந்த எதிர்ப்பையும் இந்தியா எதிர்கொள்ளும் என்பதை மோடி - புதின் நட்பு எடுத்துக் காட்டுகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு கூடுதலாக பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி வலியுறுத்துவார், அதை அதிபர் புதின் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
=====