

மண்டல பூஜை சீசன்
Southern Railway Ban Lighting Lamps, Camphor in Trains : சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாலை வழியாக, விமானம் மூலம், ரயில் மூலம் கேரளா செல்லும் அவர்கள் பின்னர் சபரிமலைக்கு செல்கிறார்கள்.
ரயில்களில் பக்தர்கள் வழிபாடு
இந்தியா முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள். இவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது. இருமுடி கட்டி வரும் பக்தர்கள், ரயில்களில் தீபம் ஏற்றியும், கற்பூரம் கொளுத்தியும் வழிபாடு நடத்துகின்றனர்.
பயணிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்
பக்திக்கு மதிப்பளிக்கும் ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்களில் வழிபாடு செய்வது தொடர்பாக உரிய அறிவுறுத்தலை பிறப்பித்து இருக்கிறது. மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழிபாடு நடத்தக் கூடாது
ஐயப்ப பக்தர்கள் தங்களின் சடங்குகள் மற்றும் வழிபாடுகளின்போது பயன்படுத்தும் இரண்டு முக்கியப் பொருட்களை ரயில் பெட்டிக்குள் பயன்படுத்தவோ அல்லது எரியூட்டவோ கூடாது என்று ரயில்வே நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது. கற்பூரம் ஏற்றி வழிபடுவது அல்லது தீபம் ஏற்றுவது ரயிலில் தீ விபத்துகளை ஏற்படுத்தக் கூடும். அது பேராபத்தை விளைவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
கற்பூரம் (Camphor)
ரயில் பெட்டிகள், குறிப்பாக கழிவறைகள் அருகில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபடுவது அல்லது தீபம் ஏற்றுவது ரயில் தீ விபத்துகளை ஏற்படுத்தக் கூடிய அதிக ஆபத்தை விளைவிக்கும்.
தீப்பற்றக்கூடிய பொருட்கள்
தீக்குச்சிகள் (Match Sticks) அல்லது ஊதுபத்திகள் (Incense Sticks) போன்ற எரியக்கூடிய வேறு எந்தப் பொருட்களையும் ரயிலுக்குள் கொண்டு வரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
தண்டனைக்குரிய குற்றம்
ரயிலுக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வே சட்டத்தின் (Railways Act, 1989) பிரிவுகள் 164 மற்றும் 165-ன் கீழ், விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
3 ஆண்டுகள் சிறை
3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். மேலும், தீ விபத்தால் ஏற்படும் சேதங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.
குளியலுக்கு தடை
சில பக்தர்கள் ரயில் பெட்டிகளிலேயே குளிப்பதால், மற்றப் பயணிகளின் அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் தீர்ந்து போகிறது. எனவே, ரயில் பெட்டிக்குள் குளிப்பதைத் தவிர்க்குமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. பெரிய ரயில் நிலையங்களில், ரயில்கள் நீண்ட நேரம் நிற்கும் இடங்களில் உள்ள கழிவறை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சக பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ஐயப்ப பக்தர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
=========