

பிகாரில் என்டிஏ ஆட்சி
Samrat Choudhary Sworn In As Bihar Chief Minister, BJP Leads Govt In State For First Time : பிகார் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
10 முறை முதல்வர் நிதிஷ்
இதையடுத்து முதல்வராக நிதிஷ்குமார் 10வது முறையாகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பிகாரில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் நிதிஷ்குமார், ராஜ்யசபா எம்.பியானார்.
கடந்த 10ம் தேதி எம்பியாக அவர் பதவியேற்றுக் கொண்டார். நேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி
நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, முதல்வர் பதவியை பாஜகவிற்கு விட்டுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து பாஜக
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஆளுநரை சந்தித்த அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி, பிகார் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்றுக் கொண்டார். பிகாரின் 21வது முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகாரில் பாஜக ஆட்சி
தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் சாம்ராட் சவுத்ரிக்கு, ஆளுநர் சையத் அடா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் முதன்முறையாக பாஜக ஆட்சியை அமைத்து சாதனை படைத்துள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை பிகாரில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சாம்ராட் சவுத்ரி?
நிதிஷ்குமார் அரசியல் துணை முதல்வராக இருந்த சாம்ராட் சவுத்ரி, குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்தவர்.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பொறுப்புகளில் இருந்தவர்.
பாஜகவில் சாம்ராட் சவுத்ரி
2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், 2023ல் அக்கட்சியின் மாநிலத் தலைவரானார். தற்போது முதல்வராக சாம்ராட் சவுத்ரி பொறுப்பேற்றுள்ளார்.