

பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு :
தமிழகத்தில் சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சர்க்கரை ₹67 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த விலை, தற்போது பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் மேலும் அதிகரித்துள்ளது.
ஏன் உயர்கிறது சர்க்கரை விலை?
இந்த ஆண்டு நாட்டின் சில முக்கிய கரும்பு உற்பத்தி மாநிலங்களில் மழைப்பொழிவு மற்றும் உற்பத்தி சவால்கள் காரணமாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கரும்பின் ஒரு பகுதி எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதும் சந்தையில் சர்க்கரையின் கிடைப்பை பாதித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவை :
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால் இனிப்புப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதிக அளவில் சர்க்கரையை கொள்முதல் செய்து வருவதால் விலை உயர்வுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கவலை :
சர்க்கரை விலை உயர்வு காரணமாக இனிப்பகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் கூடுதல் செலவை சந்தித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டிற்காக சர்க்கரை வாங்கும் பொதுமக்களும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு நடவடிக்கை எடுக்குமா?
சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த கையிருப்பு கண்காணிப்பு மற்றும் சந்தை தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்டிகைக் காலத்தில் விலை மேலும் உயராமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சக்கரை விலை உயர்வுக்கு காரணம் :
சர்க்கரை விலை உயர்வுக்கு உள்ளூர் காரணங்கள் மட்டுமின்றி, சர்வதேச சந்தை நிலவரங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. உலகின் மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதி நாடான பிரேசிலில் வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.