

பண்டிகை நாட்களுக்கும் மட்டும் தொழுகை நடத்தலாம் என அனுமதி
Supreme Court Verdict on Thiruparankundram Hill Dargah Case : மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில், நெல்லித்தோப்பு தர்கா உள்ளது. இங்கு முஸ்லிம்கள் ஆண்டு முழுதும் தொழுகை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, ரம்ஜான் மற்றும் பக்ரீத் நாட்களில் மட்டும் தொழுகை நடத்தலாம் என்று முன் கூட்டியே அனுமதித்தது.
மேல் முறையீடு
குறிப்பாக 'அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த அனுமதி இல்லை என்றும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மலையில், விலங்குகளை பலியிடுவது குறித்து தகுதிவாய்ந்த உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, எந்த ஒரு பலியிடுதல், சமைத்தல், அசைவ உணவைக் கொண்டு செல்வது, பரிமாறுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து இமாம் உசேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அதில், 'உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டுகளை நீக்க வேண்டும். தர்காவில் அனைத்து நாட்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை மையமாக வைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.'இது, சமநிலையான உத்தரவாக தெரிகிறது. இந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. 'எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டனர். இதன்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தொழுகை நடத்துவதும், விலங்குகளை பலியிட கூடாது என்பதும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.