
நாய்க்கடி பாதிப்புகள் அதிகரிப்பு :
Supreme Court Of India on Street Dog Attack : இந்தியாவில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2024ம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தெரு நாய்கள் எண்ணிக்கை உயர்வு :
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே, இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
நாய்க்கடி பாதிப்பு - எச்சரிக்கை மணி :
நாய்க்கடி குறித்து செய்திகளில் வெளியான தகவலை குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள் ஜே.பி., பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய்க்கடியால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு எச்சரிக்கை மணி என்று கவலை தெரிவித்தனர். எனவே, இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் கூறினர்.
உச்ச நீதிமன்றம் விரைவில் உத்தரவு :
நாய்க்கடி பிரச்னையை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நாளிழதில் வெளியான செய்தி அடிப்படையில் நாய்க்கடி விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்து உரிய உத்தரவுகளை மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
=====