

மா விளைச்சலில் தமிழகம்
தமிழகத்தை பொருத்தவரை மா விவசாயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல்இடத்தில் உள்ளது. சுவை மிகுந்த ரகங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு, உள்நாட்டு விற்பனை மட்டுமின்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 லட்சம் டன் அளவிலான மாம்பழ வகைகள் ஜப்பான், ஆஸ்திரேலியா, சவுதி மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
மாம்பழக் கூழ் ஏற்றுமதி
இங்கிருந்து மாம்பழங்கள், மாங்கூழாகத் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல் அல்போன்சா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட சில மாம்பழ ரகங்கள் தமிழகத்தில் இருந்து அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய மாம்பழங்களுக்கு தடை
இந்தநிலையில், இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் நாட்டு அரசு திடீரெனத் தடை விதித்துள்ளது. மாம்பழ சீசன் காலத்தில் விதிக்கப்பட்டு இருக்கும் இந்த தடையானது. விவசாயிகளுக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்படுத்தும்.
சுகாதார விதிமுறைகள் கட்டாயம்
இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், ஜப்பானுக்கு அனுப்பப்படும் பழங்கள் அனைத்தும் 'வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்' எனப்படும் ஆவி வெப்பச் சிகிச்சை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
விதிமுறைகள் மீறல்
இந்நிலையில், இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யும் ஆலைகள் சிலவற்றில் தங்களது சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, மாம்பழங்கள் இறக்குமதிக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.
விவசாயிகளுக்கு கூடுதல் சுமை
ஏற்கெனவே, மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில், ஜப்பான் நாட்டின் இறக்குமதித் தடை என்பது எங்களுக்கு மேலும் சுமையைத் தருகிறது.
அரசுக்கு கோரிக்கை
சுகாதாரக் குறைபாடுள்ள ஆலைகளுக்கு மத்திய அரசு சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
===============