

உலகின் மிகப்பெரிய விமானப் படையை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்திய விமானப்படையில் பல்வேறு ரக போர் விமானங்கள் உள்ளன. தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களும் அங்கம் வகிக்கின்றன.
விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை 48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் 2021-ல் ஒப்பந்தம் செய்தது.
ஆனால் இந்தத் திட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக, இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் அதிருப்தி தெரிவித்தார்.
இதுபற்றி விளக்கம் அளித்த எச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் டி.கே.சுனில், தேஜஸ் போர் விமானம் விநியோகத்தில் தாமதம் ஏற்பட, அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் சரியான நேரத்தில் எப்404 ரக இன்ஜின்களை விநியோகிக்காததுதான் காரணம் என்றார்.
2023-ம் ஆண்டிலேயே அவர்கள் இன்ஜின்களை தந்து இருக்க வேண்டும், ஆனால் இதுவரை, ஒரே ஒரு இன்ஜினை மட்டுமே வழங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக விமான இன்ஜின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே, அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் இந்திய விமானப் படைக்கு 6 தேஜஸ் விமானங்களை வழங்கி விடுவோம்.
தேஜஸ் -1ஏ போர் விமானங்கள் உலகத்தரம் வாய்ந்தவர். ரேடார், எலக்ரானிக் கருவிகள், பலவகை ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் வல்லமை மிக்கவை.
நமது விமானப்படையின் சிறப்பான போர் விமானங்களாக இவை செயல்படும் என்று, டி.கே. சுனில் தெரிவித்தார்.
====