

டிஜிட்டல் இந்தியாவின் மறுபக்கம்
மத்திய, மாநில அரசுகள் 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'மக்களைத் தேடி நலத்திட்டங்கள்' எனப் பல்வேறு நவீன அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், இந்தியாவின் தொலைதூரக் கிராமப்புறங்களில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பெற இன்றும் எவ்வளவு கடுமையாகப் போராட வேண்டியுள்ளது என்பதை உணர்த்தும் உருக்கமான சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
90 வயது மாமியாரை சுமந்து செல்லும் மருமகள்
சத்தீஸ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டத்தில் உள்ள மைன்பாட் என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்மானியா பாய். இப்பெண்மணி, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது 90 வயதான முதிய மாமியாரை முதுகில் சுமந்தபடி, கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் ஓடைகளைக் கடந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
இணையத்தில் வைரலாகும் காணொளி
இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, பார்ப்போரின் நெஞ்சைக் கலங்க வைப்பதோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
துயரப் பயணத்திற்கு பின்னணி
முதியோர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகையான சுமார் 1,500 ரூபாயைப் பெறுவதற்காகவே இந்தத் துயரப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Biometric விதிமுறைகள்
வங்கிகளில் ஓய்வூதியம் பெற வேண்டுமானால், பயன் பெறுபவர்கள் நேரடியாக வங்கிக்கு வந்து தங்களது கைரேகை அல்லது அடையாளச் சரிபார்ப்பைச் செய்ய வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நடக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் தனது 90 வயது மாமியாரைக் கடந்த சில மாதங்களாகவே சுக்மானியா பாய் தனது முதுகில் சுமந்து கொண்டு இந்த நீண்ட தூரக் கடினப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
கிராமப்புற போக்குவரத்து
அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதியில் முறையான சாலைகளோ அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகளோ இல்லாததே இப்பெண்ணின் அவதிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ஓய்வூதியத் தொகை :பழைய நடைமுறை
முன்பெல்லாம் இந்த முதியோர் ஓய்வூதியப் பணம் அந்தந்த கிராமங்களிலேயே அரசு ஊழியர்கள் மூலம் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், தற்போதைய டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளால் அந்தப் பழைய நடைமுறை முற்றிலும் நிறுத்தப்பட்டு, அனைத்தும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விட்டது.
இந்தத் தொழில்நுட்ப மாற்றம் தங்களுக்குப் பெரும் வேதனையையும் அலைச்சலையும் தந்துள்ளதாக அப்பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எழும் கோரிக்கைகள்
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான ஒன்றாக இருந்தாலும், போக்குவரத்து வசதிகளற்ற பழங்குடியின மற்றும் மலைக் கிராமங்களில் வாழும் முதியவர்களின் நிலையை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நடக்க முடியாத முதியோர்களுக்கு வங்க அதிகாரிகளே நேரடியாக கிராமங்களுக்கு சென்று கைரேகை சரிபார்ப்பு நடத்தவோ அல்லது மாற்று வழிகளில் பணத்தை வழங்கவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
======