
திருச்செந்தூர் முருகன் கோவில் :
Thiruchendur Subramanya Swamy Temple Online Darshan Ticket : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம், பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்தக் கோவில், “திருச்சீரலைவாய்” எனவும் அழைக்கப்படுகிறது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இதுவாகும்.
திருச்செந்தூர் தல வரலாறு :
தேவர்களுக்கு இன்னல் விளைவித்த சூரபத்மனை அழிக்க சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் முருகப் பெருமான். சூரனை அழிக்க திருச்செந்தூர் வந்த முருகன், சூரர்களை வதம் செய்து, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று இங்கு வீற்றிருக்க ஒப்புக் கொண்டார். அதன் காரணமாக உருவானதே, திருச்செந்தூர் கோவில்(Thiruchendur Temple).
செயந்திநாதர் - செந்தில்நாதர் :
வியாழ பகவான், தேவதச்சரான விஸ்வகர்மாவை கொண்டு ஆலயம் எழுப்பியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சூரனை வென்றதால், இத்தலத்தில் "செயந்திநாதர்' என முருகன் அழைக்கப் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருசெயந்திபுரம்' என அழைக்க பெற்று பின்னர், "திருச்செந்தூர்' என மருவியது.
21ம் நூற்றாண்டிலும் இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விழாக் காலங்களில் லட்சக் கணக்கானோர் கூடி முருகனை வழிபடுகின்றனர். விசேஷ நாட்கள், விடுமுறை காலங்கள், திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் கூட (வியாழன் முதல் ஞாயிறு வரை) பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ரூ.100க்கு சிறப்பு தரிசனம் :
தற்போது பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகளில் தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்(Tiruchendur Special Darshan Ticket Price). இந்நிலையில் இக்கோவிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்படுத்த முடிவு செய்திருக்கும் கோயில் நிர்வாகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, “சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது, பக்தர்கள் பெருவாரியாக வரும் கோவில்களில் தினசரி ஒரு மணிநேரம் இடைநிறுத்த தரிசன வசதி (பிரேக் தரிசனம்) ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ரூ.500க்கு பிரேக் தரிசனம் :
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டண சீட்டில் இடை நிறுத்த தரிசனம் நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதில் தைப்பூசம் (5 நாள்), மாசித்திருவிழா (10 நாள்), பங்குனி உத்திர திருவிழா (3 நாள்), சித்திரை வருட பிறப்பு (1 நாள்), வைகாசி விசாகம் (5நாள்), ஆவணி திருவிழா (5 நாள்), நவராத்திரி உற்சவம் (5 நாள்), கந்த சஷ்டி திருவிழா (10 நாள்), அமாவாசை, பவுர்ணமி (வருடத்துக்கு 24 நாள்) என மொத்தம் 68 நாட்களும், நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்களிலும் பிரேக் தரிசனம் கிடையாது.
மேலும் படிக்க : திருச்செந்தூர் சட்ட விரோதமாக தரிசன டிக்கெட்: நீதிமன்றம் எச்சரிக்கை
இதுகுறித்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் இருப்பின் கோவில் இணை ஆணையருக்கு பக்தர்கள் எழுத்து பூர்வமாக வரும் 11ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.500க்கு தரிசனம் - பக்தர்கள் ஆட்சேபம் :
கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் கோடிக்கணக்கி்ல் வருவாய் வரும் நிலையில் ரூ.500 கட்டண தரிசன முறையை(500 Darshan Ticket in Thiruchendur) அமல்படுத்துவது தேவையற்றது என அவர்கள் தெரிவித்தனர்.
===============