

மத்திய பட்ஜெட் - 2026
India's first budget was presented on April 7, 1860, when India was still under the British colonial rule. It was introduced by British economist James Wilson : மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொருளாதார ஆய்வறிக்கையில், 2027 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி (GDP ) 7.2 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பட்ஜெட்
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் ஒருபக்கம் நடந்தாலும், பட்ஜெட் குறித்த சுவாரசிய தகவல்கள் வியப்பூட்டக் கூடியவையாக இருக்கின்றன. இந்தியாவின் முதல் பட்ஜெட் என்பது பிரிட்டிஷ் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜேம்ஸ் வில்சன்
இந்திய பட்ஜெட்டுக்கு 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இருக்கிறது. 1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தால் பிரிட்டிஷ் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. அதை சரிசெய்ய, விக்டோரியா மகாராணியால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் தான் ஜேம்ஸ் வில்சன்.
1860ல் முதல் பட்ஜெட் தாக்கல்
இவர் 1860ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்னொரு ஆச்சரியமான விஷயம் உலகப் புகழ்பெற்ற 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகையை தொடங்கியதும் ஜேம்ஸ் வில்சன் தான்.
அதுமட்டுமல்ல, இன்று நாம் செலுத்தும் 'வருமான வரி' முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதும் இவர்தான். மேலும் உலகப் புகழ் பெற்ற ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியை (Standard Chartered Bank) நிறுவியதும் இவர்தான்
வருமான வரி அறிமுகம்
இன்றளவும் இந்திய வருவாயில் வருமான வரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஜேம்ஸ் வில்சன் வருமான வரி மற்றும் திருத்தப்பட்ட உரிம வரியை பட்ஜெட்டில் கொண்டு வந்தார்.
வருமானம் ரூ.200க்கு மேல் என்றால் வரி
அதன்படி ஆண்டுக்கு ரூ.200க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. மாதாந்திர செலவினக் கணக்குகளை மேற்பார்வையிட, ஆங்கில முறையை கொண்ட ஒதுக்கீட்டு தணிக்கையை ஜேம்ஸ் வில்சன் அறிமுகப்படுத்தினார்.
இந்திய பட்ஜெட்டின் தந்தை
அரசியல், ராணுவம் என பல பிரிவுகளாக பிரிந்து கிடந்த இந்திய நிதி நிலையை பட்ஜெட் மூலம் ஒருங்கிணைத்தார் ஜேம்ஸ் வில்சன். எனவே தான் இந்திய பட்ஜெட்டின் தந்தை என அவர் அழைக்கப்படுகிறார்..
சுதந்திரத்திற்குப் பின்பு முதல் பட்ஜெட்
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, புதிதாக சுதந்திரம் பெற்ற நாட்டின் முதல் மத்திய பட்ஜெட்டை ( இடைக்கால பட்ஜெட் ) நவம்பர் 26, 1947 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.