

மக்களவையில் விவாதம்
Minister Kiren Rijiju on Congress Women MPs : மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. 4ம் தேதி இந்தத் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காங். பெண் எம்பிக்கள் முற்றுகை
ஆனால், அன்று பிற்பகல் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கையைச் சூழ்ந்து, "சரியானதைச் செய்யுங்கள்" என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி முழக்கமிட்டனர். இந்தச் செயல் தவறான முன்னுதாரணம் என்று மத்திய அமைச்சர் எடுத்துக் கூறினர்.
மக்களவை வருகை - தவிர்த்த பிரதமர்
இதன்காரணமாக, மாலையில் பிரதமர் மோடி உரையாற்ற வந்தால் இதுபோன்ற சம்பவம் நடக்கலாம் என்று கணித்த சபாநாயகர் ஓம். பிர்லா, சபைக்கு வருவதை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சபாநாயகர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததாகவும் சபாநாயகர் ஓம். பிர்லா குற்றஞ்சாட்டியிருந்தார்.
காங்கிரஸ் விமர்சனம்
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த காங்கிரஸ், பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வதற்கு பயப்படுவதால்தான் அவரது உரை ரத்து செய்யப்பட்டதாக விமர்சித்தது.
வீடியோ வெளியிட்ட கிரண் ரிஜிஜூ
இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பதாகைகளுடன் போராடியதன் வீடியோ காட்சியை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் பெண் எம்பிக்கள் போராட்டம்
காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி, சுதா உள்பட நான்கு கையில் பதாகையுடன் பிரதமரின் இருக்கை அருகே சென்று கோஷம் எழுப்புகின்றனர். அப்போது பிரதமர் மோடி அவையில் இல்லை. பிரதமர் தனது இருக்கைக்கு செல்லும் வழியை மறித்து நின்று அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பெருமை கூறும் காங்கிரஸ்
இதை சுட்டிக்காட்டி இருக்கும் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் கட்சி தங்களது எம்பிக்களின் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்வதாக சாடியுள்ளார்.
இவர்களை பாஜக தடுத்து நிறுத்தாமல் எதிர்கொள்ள அனுமதித்திருந்தால் அருவருக்கத்தக்க சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
கண்ணியம் காத்த பாஜக
மேலும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறையுடன் இருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.