

Withdraw money from your PF account via UPI and ATM: Central Government's bold 'EPFO 3.0' initiative!
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO-வில் பெரும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.
விரைவில் ‘EPFO 3.0’
விரைவில் அறிமுகமாகவிருக்கும் ‘EPFO 3.0’ என்ற புதிய தளம் மூலம், பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்கு UPI செயலிகள் மற்றும் ஏடிஎம்கள் வழியாக நேரடியாகவும் உடனடியாகவும் பணம் எடுக்கும் வசதி வரவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 7 கோடிக்கும் அதிகமான EPFO உறுப்பினர்கள் தங்களின் கணக்கிலிருந்து மிக எளிமையாகவும், விரைவாகவும் நிதியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பணம் எடுக்கும் புதிய நடைமுறை மற்றும் வரம்புகள்
இந்த புதிய திட்டத்தின் கீழ் பணம் எடுப்பதற்கான செயல்முறைகளும், வரம்புகளும் பின்வருமாறு முன்மொழியப்பட்டுள்ளன.
நேரடி வங்கிப் பரிமாற்றம்
பயனர்கள் தங்களின் UPI வசதியைப் பயன்படுத்தி, தகுதியுள்ள PF தொகையைத் தங்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றிக் கொள்ள முடியும்.
75% வரை எடுக்க அனுமதி
சந்தாதாரர்கள் தங்களது மொத்த பிஎஃப் இருப்பில் 50% முதல் 75% வரை உடனடிப் பணமாக எடுக்க அனுமதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. எனினும், கணக்கின் பாதுகாப்பிற்காக மொத்த சேமிப்பில் குறைந்தபட்சம் 25% தொகை கணக்கிலேயே வைத்திருக்கப்பட வேண்டும்.
உயர்த்தப்பட்ட அவசர கால வரம்பு
அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் இதர அவசியக் காரணங்களுக்காக எடுக்கப்படும் பணத்தின் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
இந்த புதிய அமைப்பிற்கான தொழில்நுட்பச் சோதனைகள் (Testing) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது குறித்துப் பேசிய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த வசதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்குப் பிறகே இதற்கான முழுமையான நிபந்தனைகள் மற்றும் விதிகள் பயனர்களுக்கு தெளிவாகத் தெரியவரும்.
======