

Indian Banks Spent 3877 Crores for Printing and Stationery | Groww Report 2026
அசுர வேகத்தில் டிஜிட்டல் இந்தியா
இன்றைய நவீன காலகட்டத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆன்லைன் பேங்கிங், மொபைல் ஆப்ஸ் என தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது.
பணப் பரிவர்த்தனை முதல் கணக்குத் தொடங்குவது வரை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட போதிலும், நம்ம ஊர் வங்கிகளில் பேனா மற்றும் பேப்பரின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Printing & Stationery
கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் முன்னணி வங்கிகள் அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்களுக்காக ஒட்டுமொத்தமாக 3,877 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
‘Groww’ -வின் புள்ளிவிவரம்
பிரபல நிதி முதலீட்டு நிறுவனமான ‘Groww’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, எழுதுபொருட்களுக்காக அதிகத் தொகையை வாரி இறைத்த வங்கிகளின் விபரம் அம்பலமாகியுள்ளது.
பட்டியலில் முதலிடம் பிடிக்கும் SBI
வழக்கம் போல இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி மட்டும் கடந்த நிதியாண்டில் பேனா, பேப்பர் மற்றும் அச்சிடுதல் பணிகளுக்காக 986.4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது அந்த வங்கியின் மொத்த நிகர லாபத்தில் 1.22 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் HDFC
இதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி 922.5 கோடி ரூபாய் செலவழித்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
லாபத்தில் அதிக சதவீதத்தை இழந்த IDFC First
தொகையின் அடிப்படையில் பார்த்தால் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் செலவு வெறும் 122.7 கோடி ரூபாய் தான். ஆனால், தங்களது ஒட்டுமொத்த நிகர லாபத்தோடு ஒப்பிடும் போது, அதிகபட்சமாக 8.05 சதவீதத் தொகையை இந்த எழுதுபொருட்களுக்காக மட்டுமே செலவிட்ட வங்கியாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் முதலிடத்தில் வந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
மற்ற வங்கிகள்
இதே பட்டியலில் மற்ற முன்னணி தனியார் வங்கிகளான Axis Bank 373.8 கோடி ரூபாயும், ICICI Bank 318.5 கோடி ரூபாயும் அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்களுக்காகச் செலவிட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பொருளாதார வல்லுநர்கள் வியப்பு
காகிதமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி வங்கிகள் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்படும் இந்த டிஜிட்டல் யுகத்திலும், படிவங்கள், ரசீதுகள் மற்றும் ஆவண அச்சிடுதலுக்காக வங்கிகள் இத்தனை ஆயிரம் கோடிகளை செலவழிப்பது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
=====