

The Mother Teresa of Lakshadweep: 80-year-old nurse makes it to the global top 10 list!
லட்சத்தீவு வரலாற்றில் மருத்துவ சேவையின் அடையாளமாகத் திகழும் 80 வயதான மூத்த செவிலியர் இந்தும்பி கௌரம் கக்காடா (Hindumbi Kaurom Kakkada), சர்வதேச அளவில் மிக உயரிய அங்கீகாரத்தைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
Aster Guardians Global Nursing Award 2026
உலகெங்கிலும் உள்ள 214 நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட சுமார் 1 லட்சத்து 34 ஆயிரம் செவிலியர்களில், மிக உயரிய ‘ஆஸ்டர் கார்டியன்ஸ் உலகளாவிய செவிலியர் விருது 2026’ (Aster Guardians Global Nursing Award 2026) க்கான இறுதி 10 பேர் பட்டியலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
53 ஆண்டுகால அர்ப்பணிப்பு சேவை
ஒரு காந்தியவாதியின் மகளாக, தனது தந்தையின் உத்வேகத்துடன் மக்கள் சேவையைத் தொடங்கிய இந்தும்பி, கடந்த 53 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர கால மருத்துவப் பணிகளில் முன்னின்று பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்துள்ளார்.
இன்றுவரை ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்யும் இம்தும்பி
60 வயதில் பணி ஓய்வு பெற்ற பிறகும், லட்சத்தீவு மக்களின் தேவையை உணர்ந்து இன்றுவரை ஒப்பந்த அடிப்படையில் கவரட்டி அரசு மருத்துவமனையில் தனது சேவையைத் தொடர்ந்து வருகிறார்.
சவால்களை வென்ற சாதனை பெண்மணி
1972 காலகட்டங்களில் லட்சத்தீவில் போதிய மருத்துவ உள்கட்டமைப்புகள் இல்லாதபோது, பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்திலும், நடுக்கடலில் தத்தளித்த மீன்பிடிப் படகுகளிலும் சவாலான பிரசவங்களை வெற்றிகரமாக பார்த்துப் பிரசித்தி பெற்றவர் இந்தும்பி.
சுனாமி பேரிடர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலங்களிலும் தன் நலனை பார்க்காமல் களத்தில் இறங்கி பணியாற்றினார்.
அங்கீகாரமும் எளிமையும்
இவரது ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டி, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் இவருக்கு ‘தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது வழங்கி கௌரவித்தார்.
சர்வதேச விருதுகளின் பட்டியலில் இடம்பிடித்தாலும், எவ்வித அலட்டலும் இன்றி இன்றும் கவரட்டி மருத்துவமனையில் தடுப்பூசிப் பணிகளுக்கான அட்டவணையுடன் சுறுசுறுப்பாக வலம் வந்து அனைவரையும் வியக்க வைக்கிறார் 80 வயதானது இந்தும்பி .
=====