

சபரிமலை 18 படி தத்துவம்
Sabarimala 18 Steps Secrets and Meaning in Tamil : சபரிமலை புனித பயணத்தில் முக்கிய நிலையாக கருதப்படுவது 18 படிகள் தான். அதை ஏறினால் தான் மூலவர் ஐயப்பனை காண முடியும். அப்படி 18 படியில் என்ன இருக்கிறது. 18 படிகள் மட்டுமே அமைக்க காரணம் என்ன? விவரமாக பார்க்கலாம்.
சபரிமலை 18 படி ரகசியம் :
கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் 18 படிகள் ஏறி தரிசனம் செய்வார்கள். சபரி மலையைச் சுற்றி இருக்கும் மலைகளின் எண்ணிக்கை 18.
கருப்பசாமி
கருப்பசாமிக்கும், சபரிமலை ஐயப்பனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இவர்கள் இருவர்களையும் காண்பதற்கு 18 படிகள் ஏறியே செல்ல வேண்டும். கருப்பசாமி ஐயப்பனுக்கு காவல் தெய்வம். எனவே, கருப்பசாமியை தரிசிக்க 18 படி ஏறிச் செல்ல வேண்டும். எனவே தான் ஐயப்பனின் படி பூஜையில் கண்டிப்பாக கருப்பசாமிக்கும் பங்கு இருக்கிறது.
ஐயப்பன் கோவிலில் ஏன் 18 படிகள்
ஐயப்பன் தனது அவதாரத்தில் 12 வயது சிறுவனாக ஐயப்பன் உள்ளதால், உயரமாக இருக்கும் ஞான பீடத்தில் ஏறி அமர சிரமப்படக் கூடாது என்பதற்காக 18 தேவதைகள் தரையில் இருந்து கோவில் பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசை படுத்துக் கொண்டனர்.
ஐயப்பன் பதினெட்டுப் படிகளாகப் படுத்துள்ள தேவதைகள் மீது பாதம் வைத்து ஏறி வந்து ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்டார். சபரிமலை ஐயப்பன் கோவிலையும், அங்குள்ள பதினெட்டு படிகளையும் பகவான் பரசுராமரே தனது திருக்கரங்களால் உருவாக்கியதாக கருதப்படுகிறது
18 படியின் தேவதைகள்
ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு(வியாழன்), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 18 தேவதைகள் அருள்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
18 படிகளின் ரகசியங்கள்
ஐந்து புலன்கள்
முதல் 5 படிகள் - மனிதனின் ஐம்புலன்களைக் குறிக்கின்றன. அவை: கண், காது,மூக்கு நாக்கு மற்றும் மெய் (தொடுதல்). இந்த புலன்களை அடக்கி ஆள வேண்டும்.
எட்டு ராகங்கள்
அடுத்த 8 படிகள் மனிதனை நல்வழியிலிருந்து தடுக்கும் எட்டு தீய குணங்களைக் குறிக்கின்றன. அதாவது இன்பம், கோபம், பேராசை மோகம், செருக்கு, பொறாமை, அகந்தை வஞ்சகம் இவை இன்றி வாழ்க்கையை செம்மையாக கொண்டு செல்ல வேண்டும்.
மூன்று குணங்கள்
அடுத்த 3 படிகள் மனிதனின் இயல்புகளைக் குறிக்கின்றன சத்துவ குணம்: அமைதி மற்றும் தூய்மை. ரஜோ குணம்: அதீத ஆர்வம் மற்றும் செயல்பாடு. தமோ குணம்: சோம்பல் மற்றும் அறியாமை
வித்யை மற்றும் அவித்யை
கடைசி 2 படிகள் 17ம் படி ஞானம் அல்லது அறிவு பற்றி கூறப்பட்டுள்ளது. 18ம் படி அறியாமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. அறியாமையை நீக்கி ஞானத்தைப் பெறுவதே இறைவனை அடைவதற்கான படிகள்.
’தத்துவமசி’ - ஐயப்பன்
இந்தப் படிகளைக் கடந்து மேலே சென்றால், கருவறையில் "தத்துவமசி" என்ற வாசகத்தைக் காணலாம். "அதுவே நீயாக இருக்கிறாய்" என்பது இதன் பொருள்.
அதாவது, உனக்குள் இருக்கும் இறைவனை நீயே உணர வேண்டும் என்பதே இந்த சபரிமலை கோயில் உன்னதமான தத்துவம்.