

கந்த சஷ்டி விரதம் 2025 :
Kandha Sasti Kavasam Viratham 2025 Date in Tamil : கந்த சஷ்டி விரதம் என்றால் முருக பக்தர்கள் பலர் கடைபிடித்து, சூரசம்ஹாரம் பார்ப்பதுண்டு. அதிலும் 48 நாட்கள் ஒரு மண்டலம், 11 நாட்கள், 7 நாட்கள் என ஒவ்வாருவரும் ஒவ்வாருமுறையை கடைபிடிப்பர். ஆனால், 7 நாட்களும் விரதம் இருக்க முடியவில்லை என்றால் என்னசெய்யலாம், எதை செய்தால் எப்படி பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கந்த சஷ்டி காரணம்
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள், தங்களுக்கு வரும் துன்பம் நீங்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட ஒன்றை வேண்டி விரதம் இருப்பர். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு பிறகு வரும் அமாவாசைக்கு மறுநாளான பிரதமை திதி துவங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் சஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் சிலர் விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர், சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் வரை ஏழு நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள்.
குறிப்பிட்ட விரதநாள்
உடல்சூழ்நிலை அல்லது வேர காரணத்தால், 7 நாட்கள் விரதம் இருக்க முடியாமல் முருகன் பக்தர்கள், மன இருக்கத்தில் இருப்பர் அவர்கள் நம்மால் விரதம் இருக்க முடியவில்லையே, முருகனின் அருள் நமக்கு கிடைக்காதா என மனம் வருத்தப்பட தேவையில்லை. கந்த சஷ்டியின் ஏழு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள், சஷ்டி திதி வரும் சூரசம்ஹார நாளான அக்டோபர் 27ம் தேதி(Skanda Sashti Viratham 2025 Date) ஒரு நாள் மட்டும் கந்த சஷ்டி விரதம் இருந்து, முருகப் பெருமானின் அருளை பெற முடியும்.
ஓர் நாள் விரதம் :
சூரசம்ஹார நாளன்று அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விட்டு, வீட்டில் முருகப் பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைத்து, வேண்டியவை நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் இருக்கிறீர்களோ அதை முருகப் பெருமானிடம் சொல்லி மனதார வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர், முருகனை நினைத்து மந்திரங்கள் சொல்லியோ, கந்த சஷ்டி கவசம் பாடியோ முருகனை வேண்டி விரதத்தை துவங்க வேண்டும். இதில், குறிப்பாக ஷட்கோண தீபம் ஏற்றுவது சிறப்பு. முழுவதுமாக உபவாசமாக இருக்க முடிந்தால் விரதம் இருக்கலாம். இல்லை என்றால் பால், பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம்.
வழிபாட்டு முறை
பொதுவாக முருகப்பெருமானுக்கு மலர்கள் என்றால் ஈடுபாடு அதிகம் என்று கூறுவார்கள். அதனால், செவ்வரளி, முல்லை, செம்பருத்தி ஏதாவது மலர்கள் சூட்டி, முருகனுக்கு பால் மற்றும் பழம் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். முருகனுக்கு விருப்பமான கந்த சஷ்டி கவசம், வேல் மாறல், திருப்புகழ் என ஏதாவது ஒரு பாடலை நாள் முழுவதும் பாடிய படி இருக்கலாம். முடியவில்லை என்றால் "ஓம் சரவண பவ" மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். முடிந்தால் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனையும், சூரசம்ஹார நிகழ்வையும் தரிசிக்கலாம். இல்லை என்றால், அலைபேசி அல்லது ஏதாவது ஒரு திரையின் வழியாக முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வை கண்டுகொள்ளலாம். மாலையில் முருகப் பெருமானுக்கு பல விதமான கலவை சாதங்கள் அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
சஷ்டி விரதம் நிறைவு செய்யும் முறை :
சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு, கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும். குளித்து விட்டு வீட்டில் ஷட்கோண தீபம் ஏற்றி, முருகனுக்கு படைத்த பால் அல்லது சாதத்தை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டு, நீங்களும் சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். விரதத்தை நல்ல படியாக நிறைவு செய்ய அருள் புரிந்ததற்காக முருகப் பெருமானுக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும். முருகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனையும் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் வீட்டில் முருகன் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருந்தால் அதற்கு அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்து, விரதத்தை நிறைவு செய்யலாம். இப்படி ஒரு நாள் விரதம் இருந்தாலும் ஏழு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்த பலனை பெற முடியும்.
மேலும் படிக்க : கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம் : 27ம் தேதி சூரசம்ஹாரம்
மனதார வேண்டுங்கள்
ஆண்டுதோறும் தீபாவளிக்கு பிறகு வரும் இந்த சஷ்டிக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் அதிகம். ஆனால், விரதத்தை தவற விட்டோம், இருக்கவில்லை என்றாலும், முருகன் அருள் ஆனது அனைவருக்கும் கிடைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை எனவே, முருகப்பெருமானை வேண்டி, அவரின் துதிகளை பாடி, சூரசம்ஹார நாளன்று மேற்கூறியவாறு விரதம் இருந்து, நிம்மதியாக முருகப்பெருமான் அருளை பெறுங்கள்.