கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம் : 27ம் தேதி சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மிகவும் புகழ்பெற்றதாகும், ஆண்டுதோறும் இங்கு முக்கிய விழாக்கள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி, சூரசம்ஹாரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இதன்படி கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
யாகசாலை பூசையுடன் தொடக்கம்
இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்துக்கு சென்ற சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோயில் அடைந்தார். யாகசாலை பூஜைகளுடன் கந்தசஷ்டி விழா முறைப்படி தொடங்கியது.
27ம் தேதி சூரசம்ஹாரம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெயந்திநாதரை வழிபாடு செய்வார்கள். தொடந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா தீபாராதனை காட்டப்படும்.
28ம் தேதி திருக்கல்யாணம்
28ம் தேதி அதிகாலை தெய்வானை அம்மன் கோயிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 6 மணியளவில் அம்மனுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர் விழாக்கோலம்
கந்தசஷ்டி விழா தொடங்கியதால், திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 27ம் தேதி சூரசம்ஹாரத்தை கண்டு வழிபட லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
===============