

MAHA SIVARATHIRI 2026:
ஆன்மிக பக்தர்களே, மகாசிவராத்திரி அன்று எப்படி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..!
மகாசிவராத்திரி காலை பொழுதில்
மகாசிவராத்திரி (பிப்.15) அன்று காலை எழுந்தவுடன் இல்லம் முழுவதும் நன்கு சுத்தப்படுத்தி, வாசலில் மாக்கோலமிட்டு, பூஜையறையில் உள்ள சிவன் திருவுருவச் சிலை, அல்லது படத்திற்கு பூக்கள் சூடி விளக்கேற்ற வேண்டும்.
சிவனுக்கு நைவேத்தியம்
அன்றைய தினம் சிவனுக்கு உங்களால் முடிந்த பிரசாதத்தை முழுமனதோடும் உள்ளன்போடும் செய்து படைக்கலாம் . வெண்பொங்கள், பசும்பால் என உங்களால் என்ன முடியுமோ அதையே நைவேத்தியமாக படைக்கலாம்.
அல்லது அடுத்த நாள் காலையில் விரதம் நிறைவேற்றிய பின்னும் கூட படைக்கலாம்.
தடங்கலில் இருந்து காத்தருள்க
அதன்பிறகு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று, ஐயனே, சிவ பெருமானே, இன்றைய நாள் முழு மனதோடு உனதருளைப் பெற விரதம் இருக்கப் போகிறேன்.
இந்த விரதத்தின் போது எந்த வித தடங்கலுக்கும் நான் ஆளாகாமல், நல்ல முறையில் நிறைவேற்ற, வழிநடத்த வேண்டும்.
சிவனிடமே சரணடைதல்
இந்த விரதத்தின் போது என் விருப்பங்கள் நிறைவேற அருள்புரிய வேண்டும். நான் முழுமையாக உன்னில் சரணைகிறேன்
எம்பெருமானே . நீதான் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
4 ஜாம பூஜைக்கு தயாராகுதல்
அடுத்ததாக கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் பூஜைக்கான பொருட்கள் ஒவ்வொன்றையும் மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
முடிந்தால் 4 ஜாம பூஜைகளுக்கும் தேவையான பொருட்களை தனித்தனியாக எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
மாலை நேரமானதும் மீண்டும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, சிவனை மனதில் நினைத்துக் கொண்டு பூஜையை தொடங்க வேண்டும்.
”ஓம் நமசிவாய”
வீட்டில் விரதம் கடைபிடித்தால் ’ஓம்’ எனும் பிரணவ மந்திரத்துடன் விரதத்தை தொடங்கவும்.
உள்ளன்போடு திரு ஐந்தெழுத்து ஓதுதல் என்பது மிகவும் முக்கியமானது. உங்களால் இயன்றவரையில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
4 ஜாம பூஜையில் வழிபடும் தெய்வங்கள்
முதல்காலத்தில் சோமஸ்கந்தர், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தி, மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவர், நான்காம் காலத்தில் ரிஷபாரூடரை மனதில் நினைத்து வழிபாடு செய்யுங்கள்.
விரதத்தின் போது உச்சரிக்க வேண்டியவை
விரதம் இருக்கும் நேரத்தில் தவறாது சிவனின் சகஸ்ர நாமங்கள், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகை முதலானவற்றை உச்சரிக்க வேண்டும்.
இரவு முழுவது விரதம் முடித்து காலையெழுத்து சிவன் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை வணங்கி, இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் கண்கொள்ளாக் காட்சியை தரிசனம் செய்ய வேண்டும்.
வீட்டிலேயே சிவபூஜை செய்ய முடியாதவர்கள் சிவாலயங்களுக்கு சென்று கோவில்களில் நடக்கும் நான்குகால பூஜைகளில் கலந்து கொள்ளலாம்.
தானம் செய்ய தவறாதீர்கள்
வீட்டில் விரதமிருந்தாலும் சரி, கோவிலுக்கு சென்று அங்கேயே பூஜையில் கலந்துகொண்டு விரதமிருந்தாலும் சரி, உங்களால் முடிந்த தானங்களை ஏழை, எளிய மக்களுக்கு செய்ய வேண்டும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். உண்மைதான் ஏனென்றால் சிவராத்திரி அன்று தானம் செய்வது உங்களுக்கு கோடி புண்ணியங்களை பெற்றுத்தரும். சிவனருளும் முழுமையாக கிடைக்கும்.
”ஓம் நமசிவாய”
===============