

சபரிமலை ஐயப்பன் கோவில்
Thanga Angi Urvalam in Sabarimala Ayyappa Temple Mandala Pooja : கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகள் 41 நாட்கள் நடைபெறும்.
இருமுடி கட்டி வரும் பக்தர்கள்
ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து வந்து 18 படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஐயப்பனை தரிசித்து இருக்கிறார்கள்.
27ம் தேதி மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி ஊா்வலம் இன்று தொடங்கியது.
மண்டல பூஜை 27ம் தேதி காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளதாக கோயிலின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தெரிவித்து உள்ளார்.
ஆரன்முளாவில் தங்க அங்கி
ஆரன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டு இருந்த தங்க அணி முற்றத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை வைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டனர். அதன் பிறகு மேளதாளங்களுடன் ஊா்வலம் புறப்பட்டது.
26ம் தேதி ஐயப்பனுக்கு அணிவிப்பு
26ம் தேதி மாலையில் சபரிமலை கோயிலை தங்க அங்கி ஊா்வலம் வந்தடையும். அதன் பிறகு ஐயப்பன் விக்ரகத்தில் அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவு தங்க அங்கி அகற்றப்படும். மீண்டும் மறுநாள் காலை
மண்டல பூஜையின்போது தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடக்கும். தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படும்.
கோவில் நடை அடைப்பு
அன்றைய தினம் இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு, கோயில் நடை சாத்தப்படுவதுடன் மண்டல பூஜை நிறைவடையும். பின்னா், மகர விளக்கு பூஜைக்காக 30ம் தேதி நடை திறக்கப்படும்.
திருவிதாங்கூர் அரச குடும்பம்
திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் சுவாமி ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க அங்கி, சுமாா் 420 சவரன் எடை கொண்டதாகும். ஆண்டுதோறும், மண்டல பூஜையின் போது, இந்த அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை காட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
=========================