காலாவதியான சபரிமலை வழக்கு
Sabarimala Women Entry Age Limit Case : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
67 மனுக்கள் தாக்கல்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 67 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனை 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
காலாவதியான அமர்வு
அப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விசாரணை தள்ளிப்போனது. அந்த அமர்வில் இருந்து 8 நீதிபதிகள் ஓய்வுபெற்று தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அமர்வு காலாவதியானது.
ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவு
இந்நிலையில், இந்த வழக்கு வெகுநாட்களுக்குப் பின் உயிர்பெற்றுள்ளது. இந்த வழக்கை, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 22-க்குள் முடிக்கப்படும் என்றும் அமர்வு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஆதரவு
இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற சீராய்வு மனுவை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இந்த 9 நீதிபதிகள் அமர்வு, மத சுதந்திரம் மீறப்படுகிறதா, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மத விவகாரத்தில் தலையிடலாமா என்பன உள்ளிட்ட 7 அம்சங்கள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.