

பிகாரில் பிரமாண்ட கோவில்
Mamallapuram Lingam Statue 1008 Reached Bihar : பிகார் மாநிலத்தில் மிகவும் பிரமாண்டமாக 'விராட் ராமாயணக் கோயில்' கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 33 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட சிவலிங்கம் அங்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
ஒரே கல்லால் ஆன சிலை
இந்தச் சிலை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுவது சிறப்பு வாய்ந்தததாக கருதப்படுகிறது. மகாபலிபுரம் அருகே உள்ள மலைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரே ஒரு கருங்கல்லால் (Single black granite) இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
1008 சிறிய லிங்கங்கள்
உள்ளூர் கலைஞர்கள் சுமார் 3 ஆண்டுகள் செதுக்கி, இதன் மீது 1,008 சிறிய சிவலிங்கங்களை (சகஸ்ரலிங்கம்) உருவாக்கியுள்ளனர். 210 டன் எடை கொண்ட இந்த லிங்கம், நிறுவப்பட்ட பின் தரையிலிருந்து 51 அடி உயரம் கொண்டதாக விளங்கும்.
உலகின் உயரமான சிவலிங்கம்
இது "உலகின் மிக உயரமான சிவலிங்கம்" எனப் போற்றப்படுகிறது. நவம்பர் 21ம் தேதி மகாபலிபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்த சிவலிங்கம், 96 சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்ட டிரக் மூலம் இது கொண்டு செல்லப்பட்டது.
பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணம்
சிவலிங்கத்திற்கு சிறு சேதமும் ஏற்படாமல் இருக்க, டிரக் மிக மெதுவாக ( ஒரு நாளைக்கு 60 கி.மீ. மட்டுமே) இயக்கப்பட்டது. ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் வழியாகப் பயணித்தபோது, மக்கள் திரண்டு வந்து பிரார்த்தனை செய்தனர். நாக்பூரில் மக்கள் கூடிய கூட்டத்தை பார்த்து, சிவலிங்கத்தின் பயணம் ஒரு நாள் நிறுத்தப்பட்டது.
விராட் ராமாயணக் கோயில்
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா (Kaithwalia) பகுதியில் இந்தக் கோயில் அமைய உள்ளது. 125 ஏக்கர் பரப்பளவில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கோயில் உருவாகிறது.
இஸ்லாமியர் நில தானம்
270 அடி உயர பிரதான கட்டிடம், 18 கோபுரங்கள் மற்றும் 22 சிறு கோயில்கள் இதில் இடம்பெறும். இந்தக் கோயிலுக்காக இஸ்தியாக் அகமது கான் என்ற இஸ்லாமியப் பெரியவர் தனது நிலத்தைத் தானமாக வழங்கி இருப்பது சமூதாய நல்லிணக்கத்திற்கு பெரும் உதாரணம்.
ஜன.17ல் பிரதிஷ்டை விழா
ஜனவரி 17ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இந்தச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
2030ல் பணிகள் நிறைவடையும்
ஒட்டுமொத்தக் கோயில் பணிகளும் 2030-ம் ஆண்டு நிறைவடையும் என்றாலும், சிவலிங்கப் பிரதிஷ்டை பீகாரில் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் கோவில் நிறுவப்பட்டாலும், அங்கு வீற்றிருக்கும் சிலை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதிகளின் கைவண்ணத்தில் செதுக்கப்பட்டது என்பது நமக்கெல்லாம் பெருமைதான்.
=============