

A debt burden of ₹2.47 lakh crore! Over 65,000 vacant posts: Shocking findings in the Power Sector White Paper!
தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெள்ளை அறிக்கை வெளியீடு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதிநிலை, மனிதவளம் மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2001-ஆம் ஆண்டு தற்போது வரையிலான மின் வாரியத்தின் ஒட்டுமொத்த நிதி நிலவரமும், கடுமையான பற்றாக்குறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ரூ.2.47 லட்சம் கோடி கடன்: ’ஷாக்’ தரும் நிதிநிலை
மின்துறையின் ஒட்டுமொத்த நிதிநிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்துறைக்கு கடன்சுமை
மேலும், தற்போது மின் துறைக்கு ரூ.34,447 கோடி நிதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மின்துறைக்கு ரூ.87,399 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மின் வாரியத்தின் கடந்த கால வரவு-செலவு விவரங்களும் இந்த வெள்ளை அறிக்கையில் ஒப்பிடப்பட்டுள்ளன:
2001 - 2006 காலகட்டம்: மின் துறையின் வருவாய் ரூ.59,084 கோடியாகவும், செலவு ரூ.67,439 கோடியாகவும் இருந்த நிலையில், பற்றாக்குறை ரூ.8,335 கோடியாக மட்டுமே இருந்தது.
2006 - 2011 காலகட்டம்: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடியாக உயர்ந்தது.
2011 - 2016 காலகட்டம்: வருவாய் ரூ.1,92,972 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடியாக அதிகரித்தது.
2021 - 2026 : தற்போதைய நிலவரப்படி வருவாய் ரூ.4,07,000 கோடியாகவும், செலவு ரூ.5,02,443 கோடியாகவும் உள்ளது. இதன் மூலம் நடப்புப் பற்றாக்குறை ரூ.34,447 கோடியாக உள்ளது.
மின்துறையின் மனிதவளப் பற்றாக்குறை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களும் இந்த வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது மின்வாரியத் துறையில் ஒட்டுமொத்தமாக 65,921 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 9,136 பேர் ஓய்வு பெற்றிருந்த நிலையில், வெறும் 343 பேர் மட்டுமே புதிய பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2000-ஆம் ஆண்டில் 99,481 ஆக இருந்த மின் வாரிய ஊழியர்களின் எண்ணிக்கை, தற்போது 76,174 ஆகக் குறைந்துள்ளது.
கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக, தற்போது ஒரு நபர் 10 பேரின் வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
மின்துறை அமைச்சர் உறுதி
இந்த நிலையை சரிசெய்ய, தமிழக மின்துறையில் தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும், முதற்கட்டமாக காலியாக உள்ள இடங்களில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி அளித்துள்ளார்.
உள்கட்டமைப்பு முடக்கம் மற்றும் எதிர்காலத் தேவைகள்
தேவை அதிகரித்து வரும் நிலையிலும் மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் போதிய அளவில் அதிகரிக்கப்படவில்லை என வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மாநிலத்தில் மொத்தம் 1,910 துணை மின் நிலையங்கள் உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 122 துணை மின் நிலையங்கள் மட்டுமே புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் புதிதாக 238 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், தற்போது பாதியில் நின்று கொண்டிருக்கும் திட்டங்களை முழுமையாக முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர ரூ.8 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது.
உப்பூர் மின் நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
=====