

உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, வெறும் ஏஐ மாடல்களை உருவாக்கும் நிலையைத் தாண்டி, தற்போது பெரிய நிறுவனங்களின் வர்த்தகத்தை நேரடியாக மேம்படுத்தும் புதிய களத்தில் இறங்கியுள்ளது.
OpenAI -யின் புதிய கம்பெனி
இதற்காக 'OpenAI Deployment Company (DeployCo)' என்ற பெயரில் சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் புதிய துணை நிறுவனத்தை அது உருவாக்கி வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கை டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற முன்னணி இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
புதிய திட்டத்தின் செயல்முறை
இந்த புதிய உத்தியின்படி, OpenAI நிறுவனம் தனது உயர்நிலை சாப்ட்வேர் பொறியாளர்களை நேரடியாக வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு அனுப்பும்.
உதாரணமாக, ஒரு காப்பீட்டு நிறுவனம் ChatGPT போன்ற ஏஐ மாடல்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாத போது, இத்தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்குச் சென்று சில மாதங்கள் தங்கி, பழைய கணினி அமைப்புகளுடன் ஏஐ-யை ஒருங்கிணைப்பார்கள்.
அதிகரிக்கும் நிறுவனங்களின் செயல்திறன்
இதன் மூலம் மனிதர்கள் செய்யும் அன்றாடப் பணிகள் முழுமையாக ஆட்டோமேட் செய்யப்பட்டு, நிறுவனங்களின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்திய ஐடி நிறுவனங்களின் கோட்டைக்குச் சவால்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஐடி நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்குச் செய்து வந்த அதே சேவையைத் தான் அதாவது IT Consulting and Integration சேவையைத் தான் தற்போது OpenAI தற்போது கையில் எடுத்துள்ளது.
OpenAI க்கு போட்டியாக Anthropic
மேலும், இதற்குப் போட்டியாக மற்றொரு முன்னணி நிறுவனமான ஆன்ந்த்ரோபிக்கும் (Anthropic) இதே போன்ற ஒரு திட்டத்தை ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியுள்ளது.
இந்த இரு ஏஐ நிறுவனங்களும் சிறந்த மாடல்களை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், உலகளாவிய நிறுவனங்களின் அன்றாட நடைமுறைகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நிரந்தர வாடிக்கையாளர் வேட்டையில் இறங்கியுள்ளன.
எதிர்கால கணிப்பு
இந்த அதிநவீன ஏஐ தொழில்நுட்ப மாற்றத்தினால் இந்திய ஐடி நிறுவனங்கள் இதுவரை கட்டியெழுப்பிய வர்த்தகப் பேரரசு கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள, இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய மென்பொருட்களைக் கையாளுவதில் தங்களின் நிபுணத்துவத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
கேள்விக்குறியாகும் இந்திய ஐடி துறையின் எதிர்காலம்
OpenAI மற்றும் Anthropic ஆகிய நிறுவனங்களை விடவும் மேம்பட்ட முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை உள்வாங்கி, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த முறையில் சேவைகளை வழங்கத் தவறினால், இந்திய ஐடி துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனத் தொழில்முறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
=====