

மின்சாரம் தாக்கி வரலட்சுமி உயிரிழப்பு :
சென்னை கண்ணகி நகரில், கடந்த வாரம் கனமழையின் போது, மின்சாரம் தாக்கி துாய்மை பெண் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அம்பிகா நேரில் ஆறுதல் :
அந்த வகையில், வரலட்சுமி குடும்பத்தினரை, நடிகை அம்பிகாவும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ நான் தினமும் பயப்படுவது மின்வாரியத்தை நினைத்து தான். ஒரு முறை ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும்போது, சென்னை ராமாபுரத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
அதிகாரிகள் அலட்சியம் :
இதைபார்த்து மின்வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறினேன். ஆனால், அவர் அலட்சியமாக ’என் ஏரியா இல்லை’ என்று பதில் கூறினார். நிலைமையில் விபரீதத்தை உணர்ந்து, உரிய அதிகாரியிடம் கூறிய மின் இணைப்பு துண்டிக்க வேண்டும் என்ற அக்கறை கூட அவருக்கு இல்லை.
என் கையில் அதிகாரம் இருந்தால், மேஜிக் போல, சேதமடையும் மின் கம்பிகள் இருக்கும் இடத்தில் மின் இணைப்பை துண்டித்து விடுவேன்.
வரலட்சுமி மரணம், மின்வாரியமே காரணம் :
மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான், துாய்மை பணியாளர் வரலட்சுமி பலியானார். மனிதாபிமான அடிப்படையில் தான், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நான் வந்தேன்.
நடிகர்களுக்கு அக்கறையில்லை :
வேறு நடிகர் - நடிகையர் யாரும் இங்கு வராதது வருத்தம் தான். போஸ்டர் ஒட்டவும், டிக்கெட் எடுக்கவும் மட்டுமே, நடிகர்களுக்கு மக்கள் தேவையாக உள்ளனர். அதனால்தான் அந்த மக்களின் சுக, துக்கங்களில் யாரும் பங்கெடுப்பதில்லை. 'ஏசி' அறையில் இருக்கும் நடிகர்களுக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் புரியாது.
மக்கள் எதிர்த்தால், நடிகர்களுக்கு திண்டாட்டம் :
தாங்கள் படும் துன்பங்களை துடைக்கா விட்டாலும், ஆறுதலாக கூட இருக்க தயாராக இல்லாத நடிகர்களின் படங்களை பார்க்க மாட்டோம்' என ஏழைகள் முடிவெடுக்க வேண்டும். அப்போது அந்த நடிகர்கள் பாடு திண்டாட்டமாகி விடும்.
நான் அரசியலுக்கு வருகிறேன் :
இவ்வளவு துாரம் பேசுகிறீர்களே... நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என நீங்கள் கேட்டால், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். அதேசயம், மக்கள் குறை கூற முடியாத அரசியல்வாதியாக செயல்படுவேன்” இவ்வாறு அம்பிகா தெரிவித்தார்.
===================