

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 6 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இவர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து இருக்கிறார்கள்.
அதிமுக எம்.எல்.ஏக்களாக இருந்த இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர் விஜயபாஸ்கர் (கரூர் ) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
7 தொகுதிகளில் இடைத்தேர்தல்
இதையும் சேர்த்து 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தில் அதிமுக
தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பியும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான இன்பதுரை இது தொடர்பான புகாரை அளித்துள்ளார்.
தவெக குதிரை பேரம்
தவெக தலைவரும் முதல்வருமான விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ள இன்பதுரை, சந்தேகத்திற்கு உரிய வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிட தடை
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்து இடைத்தேர்தலை திணிப்பதும் பெரும்பான்மையை எட்டும் நோக்கில் தவெக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
எடப்பாடி மீது கடும் அதிருப்தி
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு பிடிக்காததால், அக்கட்சியில் இருந்து விலகியதாக அதிமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர். ஒருபக்கம் குதிரை பேர குற்றச்சாட்டு நீடித்து வருவதால், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவும்ஆளுநரிடம் புகாரளித்துள்ளது
ராஜினாமாவை ஏற்றது தவறு
தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை ” அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது தவறு. அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற விதம் தவறு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் விசாரித்து இருக்க வேண்டும்.
ஏமாற்றிய அதிமுக எம்எல்ஏக்கள்
இதையெல்லாம் சபநாயகர் செய்யவில்லை. ராஜினாமாவை ஏற்ற விதமே தவறு என்று இருக்கும் சூழலில் கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த 21 பேர் எடப்பாடியை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தனர். 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது மன்னிக்கப்பட்ட இருவர் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர்.
தேர்தலை நடத்தக் கூடாது என்பதே நிலைப்பாடு
இது அரசியல் அமைப்பு சட்டத்தின் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு அதை கேலிக்கூத்தாக்கி போய் சேர்ந்து இருக்கிறார்கள். இதன் மூலமாக 6 தொகுதிகள் காலியாகும். 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அங்கு தேர்தல் நடந்தால் கட்சி தாவிய 6 பேரும் போட்டியிடுவார்கள்.
சர்ச்சைக்குரிய இடத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அது 13 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது" என்று இன்பதுரை கூறினார்.
==============