
திமுக ஆட்சியின் அவலம் :
Edappadi Palanisamy on DMK Govt : கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி(EPS Road Show), ’கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், பயிர் காப்பீட்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகள் 30 ஆண்டு பின்தங்கி இருக்கிறார்கள். நீர் மேலாண்மை செயல்படுத்தப்படவில்லை. சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் ஆலை துவக்கப்படும் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறிவிக்கப்பட்டது. இன்று வரை பூமிபூஜை கூட போடப்படவில்லை'’ என்றார்.
நீர் மேலாண்மை துறை அமைக்கப்படும் :
அதிமுக ஆட்சியில் கொள்ளிடத்தில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே 400 கோடி செலவில் தடுப்பணை அமைக்கப்பட்டது. ஆனால் இதனை திமுக அரசு இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நீர் மேலாண்மைக்கு தனி துறை உருவாக்கப்படும். என்எல்சி பங்குகள்(EPS on NLC Share) தனியாருக்கு விற்கும்போது ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு மூலம் அதனை வாங்கி என்எல்சி ஊழியர்களை காப்பாற்றினார்.
உழவன் செயலி செயல்பாடு முடக்கம் :
தற்போது வேளாண்துறை அமைச்சராக இருப்பவரால், சொந்த ஊரில் கூட விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியில் உழவன் செயலி(Uzhavan App) மூலம் ஆன்லைனில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தற்போது உழவன் செயலி முறையாக செயல்படுத்தவில்லை. காவிரி நதி நீர், கடலுார் மாவட்டம் வரை வந்து கடலில் கலக்கிறது அந்த நதிநீர் மாசடைய கூடாது என்பதற்காக. நான் முதல்வராக இருந்தபோது விரிவான ஒரு திட்டத்தை தயார் செய்து பிரதமரிடம் வழங்கினேன்.அதிமுக அரசு அமைந்த உடன் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நல திட்டங்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம், என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
ஆட்சிக்கு வர காலில் விழும் திமுக :
இதைத்தொடர்ந்து, சிதம்பரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய இவர், ” திமுகவினர் ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்றால் யார் காலில் வேண்டுமானாலும் விழுவார்கள். மத்திய அரசில் 16 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தது. பல்வேறு பிரதமர்களின் அமைச்சரவையில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்திற்கு திட்டங்கள் கொண்டு வரவில்லை. திமுக ஆட்சியில் 7,737 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 6 மாதத்தில் 730 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. வென்டிலேட்டரில்(Ventilator) இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. 2026 தேர்தல் வாயிலாக, மக்கள் வென்டிலேட்டரை எடுத்து, திமுக ஆட்சியின் மூச்சை நிறுத்தி விடுவர்.
கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை :
கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக ஆட்சியை அற்புதமான ஆட்சி என்கின்றனர். சீட்டை குறைத்து விடுவர் என பயத்தில் ஜால்ரா போடுகின்றனர். திமுகவில் கூட்டணி கட்சியினருக்கு மரியாதை இல்லை. ஆனால், அதிமுக கூட்டணியில் சேருபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறோம். உரிய மரியாதை அளிக்கிறோம், இவ்வாறு அவர் பேசினார்.