

அதிமுகவில் அதிகரிக்கும் குழப்பம்
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவில் நாள்தோறும் பூசல்கள் அதிகரிக்க வண்ணம் இருக்கிறது.
இதுவரை 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டார்கள். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் தவெகவிற்கு தாவி வருகிறார்கள்.
தவெகவிற்கு தாவல் அதிகரிப்பு
ஏற்கனவே, ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் தவெகவில் ஐக்கியமாகி விட்டார்கள். மற்ற இரண்டு பேர் நாளை இணைகிறார்கள்.
கட்சி பொறுப்புகள் கிடையாது
தவெக அரசை ஆதரித்த எம்எல்ஏக்களில் கட்சி பொறுப்புகளை, அதாவது மாவட்ட செயலாளர் பதவிகளை எடப்பாடி பறித்தார். அவர்களில் சிலருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டாலும், சி.வி.சண்முகம், எஸ்பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள்
இதனால், எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களை சரிக்கட்டும் விதமாக வேறு பொறுப்புகளை எடப்பாடி கொடுத்து இருக்கிறார்.
துணைப் பொதுச்செயலாளர்கள்
நத்தம் விஸ்வநாதன், வேலுமணி ஆகியோரை துணை பொதுச் செயலாளர்களாக நியமித்தார் ஈபிஎஸ்.
அமைப்பு செயலாளர்கள்
தங்கமணி, கே.சி கருப்பணன், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
கொள்கை பரப்பு இணைச் செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் அதிமுகவில் இருந்து விலகிவிட்டார். நாளை தவெகவில் சேருகிறார்.
எடப்பாடிக்கு நிர்வாகிகள் கடிதம்
இந்தச்சூழலில் எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, புதிய பொறுப்புகளை ஏற்கப்போவது இல்லை. எங்களுக்கு புதிய கட்சிப் பதவிகள் வேண்டாம் என்று கூறி எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், அருண்மொழித்தேவன், பாலகிருஷ்ண ரெட்டி, எஸ் எம் சுகுமார், வீரமணி என 7 எம்.எல்.ஏ.க்களும் கிருஷ்ணமுரளி, தங்கமணி ஆகிய 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் ஈபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதிமுக உறுப்பினர்களாக தொடர்கிறோம்
சிவி சண்முகத்தை ஒதுக்கி வைத்ததை ஏற்க முடியாது என்று இவர்கள் கடிதத்தில் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக உறுப்பினர்களாக தொடர்வதையே தாங்கள் விரும்புவதாகவும், கட்சி பதவிகளை ஏற்று பணியாற்ற முடியாத சூழலுக்கு எடப்பாடி தள்ளியுள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
===================================