ஸ்டாலின் ”களத்திற்கு வந்தால் 2.0 அல்ல 0 தான்" : EPS விமர்சனம்

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ADMK Leader Edappadi Palanisamy Criticized CM MK Stalin 2. 0 on field his is Zero Read EPS Statement in Tamil
ADMK Leader Edappadi Palanisamy Criticized CM MK Stalin 2. 0 on field his is Zero Read EPS Statement in TamilSource : Google
2 min read

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Edappadi Palanisamy Criticized CM MK Stalin 2.0 : எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; ‘ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்துள்ள பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்!

பொம்மை முதலமைச்சர்

‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவை காப்பி அடிக்கிறார்

அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக-வின் உருட்டுக்கடை அல்வா

2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம். கவர்ச்சிகரமாக பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் இந்த விடியா அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ‘திமுக-வின் உருட்டுக்கடை அல்வா’ ஒன்றை தமிழக மக்களிடம் வழங்கினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாய்ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறது

மேலும், மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர வக்கற்ற ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, ஒன்றிய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது.

திமுக அரசின் இயலாமை, தோல்வி

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தவறிய திராணியற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு, தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்

மேலும், ரயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது என்று பதிவிட்டுள்ள அவர், ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.

‘பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்’ என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

ஸ்டாலினின் வாடிக்கையாகி விட்டது

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.

‘சேற்றிலும், அசிங்கத்திலும் கல் வீசினால் அந்த சேறும், அசிங்கமும் தன்மீதுதான் படும்’ என்பதையும்; ‘மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அது தன் மார்பில்தான் விழும்’ என்பதையும் உணராமல், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவத்தையும், மரியாதையையும், தகுதியையும் எண்ணிப் பார்க்காமல் உளரித் திரிவதை, ஸ்டாலின் அவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

களத்திற்கு வந்தால் 0 தான்

தமிழக மக்களை, தேர்தல் களத்தில் நெஞ்சுரத்தோடு தலை நிமிர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்திக்கும். எங்களுடைய ஆட்சியின் மாட்சிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கும் வல்லமை எங்களுக்கு உண்டு. நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர்கள் நாங்கள்.

கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில், ஒருசில மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்.” என்று அவர் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in