

அதிமுகவுக்கு யார் தயவும் தேவையில்லை
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடாவான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “இங்கு பேசிய உறுப்பினர் ஒருவர், அதிமுக திமுவோடு கூட்டணி அமைக்க முயன்றதாகக் குறிப்பிட்டார்.
அதிமுக யாருடைய தயவிலேயும் தமிழகத்தில் கட்சியை நடத்தவில்லை. அதிமுகவை நிறுவியவர் எம்ஜிஆர். அவருடைய மறைவுக்குப் பின்னால் இந்த இயக்கத்தை எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா.
களங்கப்படுத்துவதை ஏற்க மாட்டோம்
இந்த இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின்னால், இந்த இயக்கத்தையும் இந்த இயக்கத்தின் தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி வருகிறார். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை களங்கப்படுத்தி யார் பேசினாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அதிமுகவிற்கு 1.35 கோடி பேர் ஆதரவு
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 1.35 கோடி வாக்குகளுடன் 53 இடங்களைப் பெற்ற இயக்கம் அதிமுக.
47 தொகுதிகளில் அதிமுக வெற்றி
தனிப்பட்ட முறையில் 47 இடங்களை எடப்பாடி பழனிசாமி வென்றெடுத்திருக்கிறார்.யாருடைய தயவிலும் நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை.
தவெகவினர் தவறான தகவல்
ஆனால், திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம்
மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதித்திருக்கிறார்கள். நாங்கள் திமுகவோடு என்றைக்கும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கேயும் பேசவில்லை.
திமுக தீய சக்தி தான்
திமுக தீய சக்தி என்று சொன்னவர் எம்ஜிஆர், ஜெயலலிதா. அதே வழியில் அதிமுகவை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி.
எங்கள் இயக்கத்தைப் பற்றி யார் குறை சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கண்டிக்கிறோம்.” என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
===================