

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
Edappadi Palanisamy on ADMK Protest in Kallakurichi : அதிமுக கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதையும், திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிமுக சார்பில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், கள்ளக்குறிச்சி நகராட்சி, கச்சேரி சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர் இரா. குமரகுரு முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நிர்வாகிகளுடன் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர்
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக நகர்வு
எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வகையில் தொடர்ந்து மக்களின் முன் தங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசின் ஆட்சி அவலங்கள் குறித்து, கேளிக்கையான விமர்சனங்களையும், கடுமையான கண்டனங்களையும் சமூக வலைதளங்கள், நேரில் என கண்டித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது திமுகவை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள அதிமுகவில் அடுத்ததாக என்ன அறிவிப்புகள் மற்றும் கண்டிப்புகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.