

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
ADMK Protest on Coimbatore Girl Issue : கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வளர்மதி பேசும்போது. “கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முள்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார்.
அதிமுக கடும் கண்டனம்
ஆனால் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லையா ? அவர் கதறியும் வக்கிர புத்தி உள்ள அந்த கும்பல் அவரைவிடாமல் சீரழித்து உள்ளது
இந்த சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்து உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பிடிபட்டோர் உண்மை குற்றவாளிகளா?
போலீசார் இந்த சம்பவத்தில் துடியலூரில் வைத்து 3 குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக கூறி உள்ளார்கள். ஆனால் அவர்களை யாருக்கும் காட்ட வில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா ? அல்லது போலி குற்றவாளிகளா ? என்ற சந்தேகம் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும்.
திமுக கூட்டணி மவுனம்
இந்த சம்பவத்தை அதிமுக தலைவர்கள் கண்டித்து உள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் காவலரை சென்று சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி ஒன்றும் கூறவில்லை. அதேபோன்று கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. இப்போது ஸ்டாலின் போலீஸ் தான் உள்ளது.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை
இதுவரை இந்த ஆட்சியில் 4,150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமான பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு வளர்மதி கேட்டுக் கொண்டார்.
கோவை போலீசாருக்கு கேள்வி?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” விமான நிலையம் அருகே நடந்த சம்பவம் கண்டிக்கதக்கது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.இந்த மூன்று பேரை எப்படி அடையாளம் கண்டீர்கள்.அதுவும் துடியலூரிக்கு சென்று எப்படி உடனே பிடித்தீர்கள்.
அதிமுக ஒரு கடல்
அதிமுக சார்பாக மகளிருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை கொடுத்து வருகிறோம் 60 வயது பாட்டிக்கும் பெப்பர் ஸ்ப்ரே கொடுக்க வேண்டிய நிலையில் தான் தமிழகம் உள்ளது. ஒபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, அவர் அதிமுகவில் இருந்து செல்லவில்ல. அதிமுக ஒரு கடல். இது போன்ற விஷயங்களை எடப்பாடியார் தூசி தட்டி விட்டு சென்று கொண்டு இருக்கிறார்” என வளர்மதி தெரிவித்தார்.
===