

இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால், 2026-27ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை திமுக அரசால் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்யும். மே மாதம் தேர்தல் முடிந்த பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலோ, அல்லது வேறு யாரேனும் ஆட்சி அமைத்தாலோ, பின்னர் சட்டமன்றத்தை கூட்டி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். .
முன்கூட்டியே ’டெண்டர்’ அனுமதி
இந்தநிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ” சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு பட்ஜெட் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி டெண்டர் விடுவதற்கு திமுக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
பணம் வசூலிக்கும் திமுக
நெடுஞ்சாலைத் துறையில் நிதி இல்லாத நிலையில், பல பணிகளுக்கு இப்போதே டெண்டர் விட்டு கையூட்டு வசூலிக்கும் நோக்குடன் திமுக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ரூ. 2,000 கோடியில் டெண்டர்
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஜனவரி 14&ஆம் தேதியிட்ட அரசாணையின் படி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312.48 கி.மீ நீளத்திற்கான 80 சாலைப் பணிகளை ரூ.2000 கோடி செலவில் மேற்கொள்வதற்கான சிறப்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஊழலுக்கு வித்திடும் ‘டெண்டர்’
இதன் நோக்கம் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அல்ல... மாறாக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கடைசி நிமிடம் வரை, இப்போதைய ஆட்சிக் காலத்தையும் கடந்து அடுத்த நிதியாண்டில் செலவிடப்பட வேண்டிய நிதியையும் சுரண்டி முடிந்தவரை ஊழல் செய்ய வேண்டும் என்ற பேராசை தான். இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் ஆட்சி திமுக ஆட்சி தான் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
சிறப்பு அனுமதி - அரசாணை
அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான 80 சாலைத் திட்டங்களுக்கு இப்போதே டெண்டர் விடுவதற்காகத் தான் திமுக அரசு சிறப்பு நிர்வாக அனுமதியை முன்கூட்டியே வழங்கியிருக்கிறது.
இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2026&27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் முறையே ரூ.1816.15 கோடி, ரூ.31.80 கோடி, ரூ.101.75 கோடி, ரூ.48.75 கோடி, ரூ.85 லட்சம் என மொத்தம் ரூ.1998.30 கோடியை எடுத்துக் கொள்வதற்கு இந்த சிறப்பு நிர்வாக அனுமதி அரசாணை வகை செய்கிறது.
மக்களுக்கு என்ன பயன்?
இவ்வாறு சிறப்பு அனுமதி வழங்குவதால் மக்களுக்கு என்ன பயன்? இந்தத் திட்டங்கள் இப்போதே உடனடியாக செயல்படுத்தப்பட்டு விடுமா? இதனால் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது. இந்தத் திட்டங்கள் இப்போது செயல்படுத்தவும் படாது.
சட்டப்பேரவை ஒப்புதல் தர வேண்டும்
மாறாக 2026&27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், நெடுஞ்சாலைத்துறைக்கான மானியக் கோரிக்கையும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்தத் திட்டங்களுக்கான நிதியை பெற முடியும்.
அதுவும் கூட 2026&27ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை என்று அரசு முடிவு செய்தால் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படாது.
ஊழல் செய்யவே ’டெண்டர்’
அப்படியானால் நிதியே இல்லாத திட்டங்களை செயல்படுத்த சிறப்பு நிர்வாக அனுமதி எதற்கான பெறப்படுகிறது? ஊழல் செய்வதற்காகத் தான் என்று நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது
ரூ.2000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டிருப்பதன் மூலம் இந்தத் திட்டங்களுக்கான டெண்டர்களை திமுக அரசு உடனடியாக கோர முடியும். முன்கூட்டியே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த டெண்டர் நடைமுறைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் ஒரு தடையாக இருக்க முடியாது.
வேண்டிய நிறுவனங்களுக்கு சலுகை, ஊழல்
தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை வழங்கி கலெக்ஷன் கமிஷன், கரப்ஷன் செய்வது தான் சிறப்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம் ஆகும் என்று ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறுகின்றனர். திமுக எவ்வாறு விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் என்பதற்கு இந்த சிறப்பு நிர்வாக அனுமதி ஓர் எடுத்துக்காட்டு.
திமுக அரசே ரத்து செய்க!
வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் திமுகவின் இந்த ஊழலை அனுமதிக்க முடியாது. புதிதாக அமையும் அரசு தான் இந்த திட்டங்கள் தேவையா? இல்லையா? என்ற முடிவையே எடுக்க முடியும். எனவே,
டெண்டர் கோரும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
திமுக அரசுக்கு எச்சரிக்கை
80 சாலைப் பணிகளுக்கும் டெண்டர் கோரும் நடைமுறையை திமுக அரசு கைவிட வேண்டும். இதை செய்ய மறுத்தால் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசில் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அன்புமணி எச்சரித்துள்ளார்.
===================